அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியின் கடைசி ஓவர் முடியும் முன்பே விராட் கோலி கலங்கினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிக்கு அருகே இருந்த நிலையில் விராட் கோலி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.
2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. சுமார் 18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லாத அணி என்ற கடுமையான விமர்சனங்களையும், கேலி கிண்டல்களையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சந்தித்து வந்தது. அந்த அணியில் இதற்கு முன்பு விராட் கோலி மட்டுமின்றி, ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட பல்வேறு உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் விளையாடியிருந்தபோதிலும், கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்த நிலையில், ரஜத் பட்டிதார் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது. இந்தப் போட்டியின் கடைசி ஓவரில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இருந்தது.
அந்த அணியின் ஒரே நம்பிக்கையாக களத்தில் நின்ற ஷஷாங்க் சிங், அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் ரன் எதுவும் எடுக்கத் தவறினார். இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. அந்தத் தருணத்தில், விராட் கோலியின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
அதன் பிறகு ஷஷாங்க் சிங் அதிரடியாக சில சிக்ஸர்களை விளாசினாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. கடைசி பந்து வீசப்படுவதற்கு முன்பே, 18 வருட ஏக்கத்தின் வெளிப்பாடாக விராட் கோலி ஆனந்தக் கண்ணீரில் மிதந்தார். அப்போது, பவுண்டரி எல்லைக்கு அருகே இருந்த முன்னாள் ஆர்சிபி வீரரும், விராட் கோலியின் நெருங்கிய நண்பருமான ஏபி டிவில்லியர்ஸ் மைதானத்திற்குள் ஓடி வந்து விராட் கோலியை ஆரத்தழுவிக் கொண்டார். இந்தக் காட்சி ரசிகர்களை நெகிழச் செய்தது.
உலகின் முன்னணி கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 18 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அவர் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு முன்பிருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அங்கம் வகித்து வருகிறார். எனவே, ஆர்சிபி அணி அவருக்கு ஒரு வீடு போன்ற உணர்வை அளித்து வருகிறது. மேலும், 18 ஆண்டுகளாக ஒரே அணிக்காக விளையாடி வருவதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலியின் சொந்த அணி போலவே இருந்து வருகிறது.
எனவே, இந்த வெற்றி விராட் கோலிக்கு மிகவும் உணர்வுபூர்வமான ஒன்றாக அமைந்தது. சமீபத்தில் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்திருந்த நிலையில், இந்த ஐபிஎல் கோப்பை வெற்றி, அவரது கிரிக்கெட் வாழ்வில் நீண்ட காலமாக நிறைவேறாமல் இருந்த ஒரு கனவு நனவான மனநிறைவை அளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.