டெல்லி: 2017ம் ஆண்டு 10வது ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டு வருகிறது பிசிசிஐ. இதுதொடர்பாக விரைவில் ஐபிஎல் நிர்வாகக் குழு கூடி முடிவெடுககவுள்ளதாக கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு 2 முறை வெளிநாடுகளில் ஐபிஎல் தொடரை நடத்தியுள்ளது ஐபிஎல். 2009ம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்த சமயத்திலும், பின்னர் 2014ல் ஒருமுறையும் என இரு முறை வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன.

2009ல் தென் ஆப்பிரி்க்காவில் வைத்து முழுத் தொடரும் நடத்தப்பட்டது. 2014ல் பாதித் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும், மீதத் தொடரை இந்தியாவிலுமாக நடத்தினர்.
இந்த முறை மகாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் அங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்த பெரும் எதிர்ப்புக் கிளம்பியதால் கிரிக்கெட் வாரியம் சங்கடத்தை சந்திக்க நேரிட்டது. இதனால் அடுத்த ஆண்டு தொடரை வெளிநாட்டில் நடத்த யோசிக்கப்பட்டு வருகிறதாம்.
இதுகுறித்து அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சூழல் குறித்து ஆராய்ந்து வருகிறோம். எந்த நாட்டில் மைதானகள் தயாராக இருக்கின்றன என்பது குறித்துப் பார்க்க வேண்டியுள்ளது என்றார் தாக்கூர்.
அடுத்த ஆண்டு போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்படுமாயின், போட்டிகள் எந்த நாட்டில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெரும்பாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
தற்போதைய 9வது தொடரில் வறட்சி காரணமாக 12 போட்டிகள் மகாராஷ்டிராவை விட்டு வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.