ராஜ்கோட்: ஐ.பி.எல். லீக் போட்டியில் ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். வாட்சனும், கோஹ்லியும் தொடக்க ஆட்டகாரர்காளாக இறங்கினர். வாட்சன் 6 ரன் எடுத்திருந்த போது குல்கர்னி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்தார் டி வில்லியர்ஸ். இருவரும் நிதானமாக ரன் குவித்தனர். இந்த ஜோடி தாம்பே பந்துவீச்சில் பிரிந்தனர். தாம்பே வீசிய பந்தை டி வில்லியர்ஸ் தூக்கி அடித்தபோது அதை சுரேஷ் ரெய்னா கேட்ச் பிடித்தார். இதனால் டி வில்லியர்ஸ் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து கே. ராகுல் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை குஜராத் அணியால் இறுதி வரை பிரிக்க முடியவில்லை. அதிரடியாக ஆடிய விராட் 67 பந்துகளில் சதம் அடித்தார். டி20 போட்டிகளில் கோஹ்லி அடிக்கும் முதல் சதம் இதுவாகும். 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 2 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் எடுத்தது. ராகுல் 51 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் நின்றார்.
பெங்களூரை தொடர்ந்து கடின இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு தொடக்க வீரர் ஸ்மித் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். மறுமுனையில் மெக்கல்லமும் 24 பந்துகளில் 42 ரன்கள் அடுத்து அவுட் ஆனார்.
இதன் பின்னர் கேப்டன் ரெய்னாவும், தினேஷ் கார்த்திக்கும் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். ரெய்னா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குஜராத் அணி வெற்றிப் பெற கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் 3 பந்தை பவுண்டரிக்கு அடித்து குஜராத் அணியை பிராவோ வெற்றிப்பெற வைத்தார்.
தினேஷ் கார்த்திக் 39 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூர் அணியின் கேன் ரிச்சர்ட்சன் 4 ஓவர்கள் வீசி 53 ரன்களை வாரி வழங்கியது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது.
பெங்களூர் அணி தோல்வி அடைந்த போதும் டி20 போட்டியில் தனது முதல் சதத்தை அடித்த விராட் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் குஜராத் அணி தான் விளையாடி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.