பெங்களூரு : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர் சி பி அணி 212 ரன்களை அடித்தும் தோல்வியை தழுவியது. இந்த இலக்கை துரத்திய லக்னோ வீரர்கள் 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் அதன் பிறகு நிக்கோலஸ் பூரான் 19 பந்துகளில் 62 ரன்கள் குவித்து லக்னோ அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இந்த நிலையில் ஆர்சிபி அணி கூடுதலாக ஒரு 20 ரன்கள் அடித்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் பேட்டிங் செய்யும்போது ஆர்சிபி ஒரு மிகப்பெரிய தவறு செய்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் விராட் கோலி தான் என்ற புகார் எழுந்துள்ளது. தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார்.

ஆனால் அதன் பிறகு சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது விராட் கோலி தடுமாறினார். அடுத்த 19 ரன்களை எடுக்க விராட் கோலி 19 பந்துகளை எதிர் கொள்ள வேண்டியதாயிற்று. இதனால் 44 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி ஆட்டம் இழந்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் விராட் கோலி 42 ரன்களில் இருந்து 50 ரன்கள் என்ற மைல்கல்லை தொட பத்து பந்துகளை எடுத்துக் கொண்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வர்ணனையாளர் சைமன் தூல், விராட் கோலி, எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தில் தனது இன்னிங்ஸை தொடங்கி பந்து வீச்சாளர்களை சிதறடித்தார். ஆனால் 42 ரன்களில் இருந்து அரைசதத்தை தொட 10 பந்துகளை அவர் எடுத்துக் கொண்டார். இது விராட் கோலி மைல்கல்லை அடைய எண்ணுகிறார் என்று தான் அர்த்தம்.

டி20 கிரிக்கெட்டில் இனி மைல்கல்களுக்கு வேலையே கிடையாது. நீங்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும். கைவசம் விக்கெட்டுகள் இருந்தால் உங்கள் அதிரடியை நீங்கள் நிறுத்தக்கூடாது என்று சைமன் தூல் கூறியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் விராட் கோலி சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக வெறும் 106 ஸ்ட்ரைக் ரைட்டில் தான் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர் சி பி அணி பவர் பிளே முடிவில் 56 ரன்களை எடுத்தது. ஆனால் ஆறாவது ஓவரில் இருந்து 14 வது ஓவர் வரை ஆர் சி பி அணி வெறும் 48 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறது. இது தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.