சென்னை சேப்பாக்கத்தில் பிபிஎல்.. அடிலெய்டில் ஐபிஎல்.. பக்கவாக திட்டம் போட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட்
அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுடன் ஐபிஎல் தொடர் உலகின் பெரிய விளையாட்டு தொடராக மாறி வருகிறது. மேலும், இந்தியாவை தாண்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரை ஆஸ்திரேலியாவிற்கும் கொண்டு வர அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் சென் ஊடகத்தின் தகவலின்படி, 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐபிஎல் தொடரின் ஒரு சில லீக் போட்டிகளை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடத்த அந்நாட்டு அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கான திட்டங்களை அடிலெய்ட் ஓவல் மைதானத்தின் தலைவர் ஜேமி பிரிக்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் வில் ரெய்ன் ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.

சென்னையில் பி.பி.எல்?
இந்தத் திட்டத்தில் மற்றொரு சுவாரசியமான அம்சமும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியை சென்னையில் நடத்தவும், அதற்குப் பதிலாக ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியை அடிலெய்டில் நடத்தவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த பரஸ்பர ஒப்பந்தம் இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கும் லாபகரமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
சாதகமான சூழல்
மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நிலவும் காலநிலை கிரிக்கெட் விளையாட மிகவும் ஏதுவாக இருக்கும். மேலும், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களை ஈர்க்கவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் பீட்டர் மலினவுஸ்காஸ் மற்றும் மத்திய வர்த்தக அமைச்சர் டான் பாரல் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிசிசிஐ அனுமதி
இந்தத் திட்டம் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் பிக் பேஷ் லீக் கிளப்புகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ஐபிஎல் தொடரை நடத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) இன்னும் அதிகாரப்பூர்வமாக அனுமதி கோரப்படவில்லை. பிசிசிஐ பச்சைக்கொடி காட்டினால் மட்டுமே ஆஸ்திரேலியாவில் ஐபிஎல் நடப்பது உறுதியாகும்.
ஏற்கனவே அடிலெய்ட் மைதானம் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. தற்போது ஐபிஎல் தொடரையும் அங்கு நடத்த முயற்சி எடுப்பது உலக கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இது சாத்தியமானால், ஆஸ்திரேலிய மண்ணில் ஐபிஎல் சிக்சர்கள் பறப்பதை ரசிகர்கள் நேரில் கண்டு மகிழலாம். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு அதிக பலனை தரும் இந்த திட்டத்துக்கு பிசிசிஐ ஒப்புக் கொள்ளுமா? என்ற கேள்வியும் எழுகிறது.


Click it and Unblock the Notifications