மும்பை: ஐபிஎல் 9வது சீசனின் முதல் போட்டியில் நாளை, நடைபெறும் தொடக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதை முன்னிட்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் இன்று மாலை மும்பையில் கோலாகல நடந்தது.
இந்தியாவில் 2016ம் ஆண்டு ஐபிஎல் 9-வது 20 ஓவர் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று மும்பை வொர்லியில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா அரங்கில் நடைபெற்றது.

தொடக்க விழா நிகழ்ச்சியில் போட்டியில் பங்கேற்கவுள்ள 8 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர். விழாவில் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கோப்பை அறிமுகம் செய்து வைத்தார்.
32 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்த இந்த விழாவில், பாலிவுட் நட்சத்திரங்கள் கேத்ரினா கைப், ரன்வீர் சிங், ஜாக்குலின் பெர்னாண்டஸ், யோயோ ஹனிசிங் ஆகியோரது நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல, மேற்கிந்திய தீவுகள் வீரரும், ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடப்போகிறவருமான பிராவோ, சாம்பியன் பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மின்னணு இசைக்குழுவான மேஜர் லேசர் குழுவின் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இதுதவிர பிரிட்டனைச் சேர்ந்த பாப் பேண்ட் குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த குழுவின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் அரங்கை ஒளிர வைக்கும் நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாளை தொடங்கும் 9வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மே 29ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.