மும்பை: 3வது ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று மாலை கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது.இதில் வழக்கம் போல பல சர்வதேச அதிரடி வீரர்கள் பங்கேற்கிறார்கள். கடந்த காலங்களில் வந்த சிலர் இந்த முறை வரவில்லை.முதல் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்தபோது அதற்கு ரசிகர்களின் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால் 2வது போட்டித் தொடர் தென் ஆப்பிரிக்காவுக்கு இடம் பெயர்ந்தபோது இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.இந்த நிலையில் 3வது தொடர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாமடைந்துள்ளனர். ரசிகர்களின் ஆர்வத்தை பல மடங்காக அதிகரிக்கும் வகையில் பல்வேறு வகையான விளம்பரங்களையும் போட்டுத் தாக்கி்க் கொண்டிருக்கிறது ஐபிஎல் நிர்வாகம்.இன்று இரவு முதல் போட்டி நடைபெறுகிறது. அதற்கு முன்பு யார் யாரெல்லாம் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை சுருக்கமாக பார்ப்போம்...டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கேப்டன் மாறி விட்டார். கெளதம் கம்பீர் கேப்டனாக முதல் ஐபிஎல் தொடரை சந்திக்கிறார்.அதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக குமார சங்கக்காரா பொறுப்பேற்றுள்ளார். ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மீண்டும் கேப்டனாகியுள்ளார் கங்குலி. மேலும் பயிற்சியாளர் ஜான் புச்சானன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து டேவ் வாட்மோர் புதிய பயிற்சியாளராகியுள்ளார். பந்து வீச்சுப் பயிற்சியாளராக வாசிம் அக்ரம் சேர்ந்துள்ளார்.இதுமட்டுமல்லாமல் தங்களது சீருடையின் நிறத்தையும் மாற்றியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதுவரை கருப்புடன் திரிந்த அந்த வீரர்கள் இனிமேல் பர்பிள் கலருக்கு மாறியுள்ளனர்.அதேபோல ஷில்பா ஷெட்டியுடன் துணையுடன் களம் இறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கலர்ஃபுல்லாக இருக்கும் என நம்பலாம்.இந்த முறை அகமதாபாத், நாக்பூர், தர்மசாலா, கட்டாக் ஆகிய நகரங்களில் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆனால் ஹைதராபாத் இந்த முறை கிடையாது.இந்த முறை போட்டிகளை யூடியூபிலும் முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளனர். 3வது தொடரில் பிளின்டாப், ஜெஸ்ஸி ரைடர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆட மாட்டார்கள். அதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ளார் ஷேன் பாண்ட். #13;