மும்பை: நான்காவது ஐபிஎல் தொடரில் பங்கேற்க கொச்சி ஐபிஎல் அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.கொச்சி அணியின் உரிமையாளர்களுக்கு இடையே கடும்மோதல் மூண்டதால், அந்த அணியை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதையடுத்து அந்த அணிக்கு பிரச்சினையைத் தீர்க்க அவகாசம் தரப்பட்டது. இந்த நிலையில், திடீரென கொச்சி அணியின் முதலீட்டாளர்கள் விலகிக் கொண்டனர். இதனால் கொச்சி அணி ரத்தாவது உறுதியானது. இந்த நிலையில் தற்போது கொச்சி அணியையும் நான்காவது ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் வாரியம் அனுமதித்துள்ளது.இத்தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் என். சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் கொச்சி அணிக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு அளிக்கப்பட்ட பதில் திருப்திகரமாக இருந்ததால் ஐபிஎல் நிர்வாகக் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால் கொச்சி அணியும் நான்காவது ஐபிஎல் தொடரில் பங்கேற்பது நிச்சயமாகியுள்ளது.