சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த லக்னோவை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. முதல் லீக் ஆட்டத்தில் மற்றொரு புதிய அணியான குஜராத்திடம் வீழ்ந்த சிஎஸ்கே இம்முறை வெற்றி பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் களமிறங்குகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் தொடக்கம் மற்றும் வேகப்பந்துவீச்சு என இரண்டுமே பிரச்சினையாக உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் படி, இன்று தொடக்க வீரர் டிவோன் கான்வேவை நீக்கிவிட்டு, வேகப்பந்துவீச்சாளர் பிரிட்டோரியசை சேர்க்க வாய்ப்புள்ளது.

சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இன்று சிஎஸ்கே அணி சுழற்பந்துவீச்சை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அணியில் மோயின் அலி, ஜடேஜா, மிட்செல் சாண்டனர் உள்ள நிலையில், சிஎஸ்கே அணி சிவம் துபேவை நீக்கிவிட்டு அண்டர் 19 சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் நிஷாந்த் சிந்துவை களமிறக்கலாம்.
இதே போன்று இம்பாக்ட் வீரராக இம்முறை லெக் ஸ்பின்னர் பிரசாந்த் சோலங்கியை பயன்படுத்தலாம். இந்த மாற்றங்கள் செய்தால் சிறப்பாக இருக்கும். இல்லையெனில் தோனி எப்போதுமே கணிக்க முடியாதபடி செயல்படுவார் என்பதால் முதல் போட்டியில் விளையாடியவர்களுக்கே இம்முறையும் வாய்ப்பு வழங்கலாம்.
சிஎஸ்கே பிளேயிங் லெவன் 1, ருதுராஜ் கெய்க்வாட், 2, பென் ஸ்டோக்ஸ், 3, மோயின் அலி, 4, அம்பத்தி ராயுடு, 5, தோனி, 6, ஜடேஜா, 7, சிவம் துபே/ நிஷாந்த் சிந்து, 8, பிரிட்டோரியஸ், 9 தீபக் சாஹர், 10, மிட்செல் சாண்ட்னர், 11, தேஷ்பாண்டே