சென்னை: சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று சில அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருந்த அடுத்த 6 போட்டிகள் மாற்றப்படுகின்றன. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் 11வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ளன. போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன.
அதன்படி சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் 7 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவது தங்களுடைய போராட்டங்களின் கவனத்தை திருப்பிவிடும், அதனால் ஐபிஎல் போட்டி நடத்தக் கூடாது என்று கட்சிகள் வலியுறுத்தின. இதனால், போட்டியை நடத்தக் கூடாது என்று, மிகப் பெரிய போராட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஈடுபட்டன. பலத்த பாதுகாப்புக்கு இடையே சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நேற்று நடந்தது. அதில் சிஎஸ்கே வென்றது.
மிகப் பெரிய அளவில் போராட்டம் நடந்தபோதும், ஆயிரம் நாட்களுக்கு பின் சென்னையில் நடக்கும் போட்டி என்பதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் நேற்று மைதானத்தில் குவித்தனர். தொடர் போராட்டம் மற்றும் எச்சரிக்கையை அடுத்து, வீரர்களின் பாதுகாப்புக்காக சென்னையில் நடைபெறும் போட்டிகளை மாற்றுவதற்கு ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் அடுத்ததாக, 20ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ், ஏப். 28ல் மும்பை இந்தியன்ஸ், ஏப். 30ல் டெல்லி டேர்டெவில்ஸ், மே 5ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மே 13ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மே 20ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தப் போட்டிகள் வேறு மைதானத்துக்கு மாற்றப்பட உள்ளது. இதனால், சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.