மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் இந்திய அணியின் ரிஷப் பண்ட்-ஐ ரூ.27 கோடிக்கு வாங்கி லக்னோ அணி ஆச்சரியம் கொடுத்தது. இந்த நிலையில் மெகா ஏலத்தில் லக்னோ அணி எப்படி செயல்பட்டது என்பது குறித்து அனுபவ வீரரான அஸ்வின் மற்றும் அனலிஸ்டான பிரச்சன்னா இருவரும் விவாதித்தனர்.
அதில் அஸ்வின் மற்றும் பிரசன்னா இருவரும் பேசுகையில், கடந்த சீசனில் கேஎல் ராகுல் இருந்தார். அவரை ரிலீஸ் செய்த பின் ரிஷப் பண்ட் போன்ற ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள வீரர் தேவை என்பதில் லக்னோ அணி தெளிவாக இருந்துள்ளது. லக்னோ அணியின் அடையாளமாக முகமாக ஒரு வீரரை தேடி, சரியாக ரிஷப் பண்ட்-ஐ ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் எந்த தவறும் இல்லை.

யுவராஜ் சவுத்ரி என்ற வீரரை லக்னோ அணி வாங்கியது. அவர் இப்போது நடந்து வரும் சையத் முஷ்டாக் அலி தொடரில் அட்டகாசமாக விளையாடி வருகிறார். தொடக்க வீரரான அவர் கர்நாடகாவுக்கு எதிராக சதம் விளாசி இருக்கிறார். இதனால் லக்னோ அணிக்கு தொடக்க வீரர் இல்லை என்று சொல்ல தேவையில்லை. நேரடியாக ஐபிஎல் அணியில் விளையாடுவாரா என்பது தெரியாது.
அதேபோல் ரிஷப் பண்ட்-ம் ஒரு காலத்தில் தொடக்க வீரர் தான். ஆனால் அவர் கேப்டன் என்றால், தொடக்கம் கொடுப்பாரா என்பது சந்தேகம் தான். என்னை பொறுத்தவரை நம்பர் 3ல் ரிஷப் பண்ட் வருவார். லக்னோ அணியில் பவரான ஹிட்டர்கள் அதிகமாக உள்ளனர். அதேபோல் ரிஷப் பண்ட், பூரன், மில்லர் என்று இடதுகை பேட்ஸ்மேன்களால் மிடில் ஆர்டரை நிரப்பி இருக்கிறார்கள்.
இவர்களுக்கு எதிரான ஆஃப் ஸ்பின்னர்களை மற்ற அணிகள் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் லக்னோ அணியின் பவுலிங்கில் மோசின் கான், மயங்க் யாதவ் இருவரும் அதிகளவில் காயமடைவார்கள். இதனால் முழு சீசனும் அவர்களால் விளையாட முடியுமா என்பது தெரியாது. ஆகாஷ் தீப்பை பொறுத்தவரை லக்னோ பிட்சில் எப்படி செயல்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
லக்னோ அணியின் அனைத்து பேஸ்-ம் கவர் செய்யப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ஜஸ்டின் லாங்கர் இந்திய இளம் வீரரான அர்ஷின் குல்கர்னியை அதிகமாக பாராட்டினார். இம்முறையும் அவரை வாங்கியுள்ளார்கள். அதேபோல் தொடக்க வீரர்களாக இரு வெளிநாட்டு வீரர்களை விளையாடாமல் இருந்தால், பவுலிங்கில் ஒரு வெளிநாட்டு வீரரை கொண்டு வர முடியும்.
ஆனால் ஷமார் ஜோசப்பை கடந்து வேறு எந்த வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரையும் லக்னோ அணி வாங்கவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து நட்சத்திர வீரரை வாங்க வேண்டும் என்று ஓடுவது சரியா என்ற அஸ்வின் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரசன்னா பேசுகையில், எந்த தவறும் இல்லை. ரிஷப் பண்ட் இன்னும் 6 ஆண்டுகளுக்கு உச்சக்கட்ட கிரிக்கெட்டை விளையாடப் போகிறார்.
இப்படி ஒரு வீரர் மீது பெரிதாக முதலீடு செய்யும் போது, அவருடன் நீண்ட காலம் பயணிக்க வேண்டும். குறைந்தது அந்த அணி நிர்வாகம் 10 ஆண்டுகளாவது ரிஷப் பண்ட் உடன் பயணிக்க வேண்டும். ஒருமுறை ரஸ்ஸலிடம் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்ட போது, அவர் கேகேஆர் உடன் மட்டுமே பயணிப்பேன் என்று பதில் அளித்தார்.
என்ன நடந்தாலும் அந்த அணியை விட்டு வெளியேற மாட்டேன் என்று சொல்கிறார். பொல்லார்ட்-ம் மும்பை அணியால் ரீடெய்ன் செய்ய முடியாத போது உடனடியாக ஓய்வை அறிவித்துவிட்டார். புனே அணிக்காக தோனி விளையாடிய போதும், அடுத்த சீசன் எப்படி என்று கேட்டிருக்கிறேன். அப்போது தோனியும், சிஎஸ்கே அணி தான் என்று அவ்வளவு மகிழ்ச்சியுடன் கூறினார்.
10 ஆண்டுகளாக வெவ்வேறு அணிகளுக்கு விளையாடினாலும், அஸ்வினும் சிஎஸ்கே அணிக்கு வந்தது தான் மகிழ்ச்சி என்று கூறுகிறார். லக்னோ அணியும் ரிஷப் பண்ட் உடன் அப்படி தான் பயணிக்க வேண்டும். ஆனால் மும்பை, சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணியில் மட்டுமே இதுபோன்ற விஷயங்கள் நடக்கிறது. இப்படியொரு வீரரை மீண்டும் ஏலத்தில் விடக் கூடாது என்று தெரிவித்தார்.