ஜெட்டா: ஐபிஎல் மெகா ஏலத்தில் 13 வயதாகும் சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய யு19 அணிக்காக விளையாடி வரும் அவர், பீகார் ரஞ்சி டிராபியிலும் விளையாடி வருகிறார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் 2வது நாளில் ஏராளமான ஆச்சரியமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கிட்டத்தட்ட மெகா ஏலத்தின் நிறைவு பகுதியை எட்டிய நிலையில், திடீரென 13 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி என்று சிறுவனின் பெயரை ஏலத்தை நடத்தும் மல்லிகா சாகர் அறிவித்தார். ஏற்கனவே உள்ளூர் வீரர்கள் மற்றும் சர்வதேச வீரர்கள் பலரையும் வாங்க எந்த அணியும் முன் வரவில்லை.

இதனால் 13 வயதாகும் சிறுவனை எந்த அணி வாங்கும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் வைபவ் சூர்யவன்ஷியை வாங்குவதற்காக ராஜஸ்தான் அணி பேடிலை உயர்த்த, இன்னொரு பக்கம் டெல்லி அணி நிர்வாகமும் போட்டிக்கு வந்தது. இதனால் வைபவ் சூர்யவன்ஷியின் அடிப்படை விலையான ரூ.30 லட்சத்தில் இருந்து அவரின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகமாக சென்றது.
இறுதியாக ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணி வைபவ் சூர்யவன்ஷியை வாங்கியது. இவர் ஏற்கனவே இந்திய யு19 அணியில் விளையாடி வருகிறார். இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா யு19 அணிக்காக விளையாடி இருந்தார்.
அந்த டெஸ்ட் தொடரில் 108 ரன்களை சேர்த்த அவர், ரஞ்சி டிராபி தொடரில் பீகார் அணிக்காக விளையாடி வருகிறார். இடதுகை பேட்ஸ்மேனான அவர், இதுவரை பீகார் அணிக்காக ரஞ்சி டிராபியில் 5 போட்டிகளில் விளையாடி 100 ரன்களை விளாசி இருக்கிறார். இவரின் திறமையை மதித்து ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் வாங்கியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
8வது படிக்கும் சிறுவனை வைத்து ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி விளையாடவுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஐபிஎல் தொடருக்கு மட்டுமல்லாமல் ஐபிஎல் மெகா ஏலத்திற்கும் மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது. ஒரு பக்கம் சிஎஸ்கே அணியின் தோனி 42 வயதில் இருக்கும் போது, இன்னொரு பக்கம் 13 வயதாகும் சிறுவன் நின்றால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.