ஜெட்டா: ஆஃப்கானிஸ்தான் இளம் ஸ்பின்னரான நூர் அஹ்மத்தை ரூ.10 கோடி கொடுத்து சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இவர் ஏற்கனவே டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில், அவரை சிஎஸ்கே அணியிலும் பயிற்சியாளர் ஃபிளம்மிங் கொண்டு வந்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக குஜராத் அணி விளையாடியது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றியை பெற்றாலும், குஜராத் அணியின் இளம் ஸ்பின்னரான நூர் அஹ்மத் 3 ஓவர்கள் பவுலிங் செய்து 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அப்போதே நூர் அஹ்மத் மீது சிஎஸ்கே அணி நிர்வாகம் கண் வைத்தது. இதனைத் தொடர்ந்து எம்எல்சி தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக நூர் அஹ்மத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடி கொடுத்து வாங்கியது. இதன் மூலமாக ஜடேஜா - அஸ்வின் கூட்டணியை சிஎஸ்கே அணி நிர்வாகம் சேப்பாக்கம் மைதானத்தில் கொண்டு வந்தது.
இதன் மூலமாக ஸ்பின்னர்களின் தேவை முடிந்துவிட்டதாக பார்க்கப்பட்டது. ஆனால் இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக 3வது ஸ்பின்னருடன் விளையாடும் வாய்ப்பு அனைத்து அணிகளுக்கும் அமைந்தது. கடந்த சில சீசன்களாக ராஜஸ்தான் அணி அஸ்வின், சாஹல் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோரை பயன்படுத்தி சிஎஸ்கே அணியை வீழ்த்தி வந்தது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகமும் 3வது ஸ்பின்னரை பயன்படுத்த முடிவு எடுத்தே இந்த மெகா ஏலத்தில் களமிறங்கியுள்ளது. ஆஃப்கானிஸ்தான் வீரர் நூர் அஹ்மத் பெயர் அறிவிக்கப்பட்ட பின், சிஎஸ்கே அணி நிர்வாகம் உடனடியாக ஏலம் கேட்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் ரூ.5 கோடிக்கு நூர் அஹ்மத்தை சிஎஸ்கே அணி பெற்றுவிட்டதாக கருதப்பட்டது.
ஆனால் குஜராத் அணி நிர்வாகம் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தியது. இதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அஹ்மத்தின் தொகை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது. இதனால் குஜராத் அணி பின் வாங்க, சிஎஸ்கே அணி அவரை கைப்பற்றியது. இதன் காரணமாக சேப்பாக்கம் மைதானத்தில் ஜடேஜா, அஸ்வின் மற்றும் நூர் அஹ்மத் ஆகிய மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்று பார்க்கப்படுகிறது.