ஜெட்டா: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவுக்கு வந்துள்ளது. இதில் ஆர்சிபி அணி தரப்பில் ரூ.83 கோடி பர்ஸ் தொகையுடன் களமிறங்கியது. ஏற்கனவே நட்சத்திர வீரரான விராட் கோலி ரூ.21 கோடிக்கும், ரஜத் பட்டிதர் ரூ.11 கோடிக்கும், யாஷ் தயாள் ரூ.5 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டனர். இதனால் ஆர்சிபி அணி முழு அணியையும் கட்டமைக்க வேண்டிய தேவையுடன் மெகா ஏலத்திற்கு வந்தது.
அந்த வகையில் ஆர்சிபி அணி தரப்பில் முதல் வீரராக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் ரூ.8.75 கோடிக்கு வாங்கப்பட்டார். சின்னச்சாமி மைதானத்தில் ஃபினிஷர் ரோலில் களமிறங்கி அதிரடியான சிக்சர்களை விளாசக் கூடியவர். இரு கைகளாலும் பவுலிங் செய்ய முடியும் என்றாலும், பெங்களூர் மைதானத்தில் லிவிங்ஸ்டனுக்கு பவுலிங் கொடுப்பது சிக்கல் என்று பார்க்கப்படுகிறது.

அதேபோல் 2வது வீரராக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் ரூ.11.50 கோடிக்கு வாங்கப்பட்டார். மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கும் அவர் விராட் கோலியுடன் தொடக்கம் கொடுக்க முடியும். கூடுதல் தொகை கொடுக்கப்பட்டிருந்தாலும், ஆர்சிபி அணியின் சிறந்த செயல்பாடாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 3வது வீரராக ஜித்தேஷ் சர்மா ரூ.11 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசனில் தினேஷ் கார்த்திக் செய்த பணிகளை சிறப்பாக செய்யக் கூடியவர். தொடர்ந்து 4வது வீரராக ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் ஹேசல்வுட்டை மும்பை அணியுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு ஆர்சிபி அணி ரூ.12.50 கோடிக்கு வாங்கப்பட்டார். ஏற்கனவே ஆர்சிபி அணிக்காக விளையாடி இருப்பதால், சின்னச்சாமி மைதானத்தில் மிகச்சிறப்பாக செயல்பட முடியும்.
இதனைத் தொடர்ந்து டெல்லி அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்திய போதும் கொஞ்சம் கூட பின் வாங்காமல் இந்தியா ஏ அணிக்காக அசத்தி வரும் ரஷீக் தாரை ரூ.6 கோடி கொடுத்து கைப்பற்றியது. இதன்பின் ஸ்பின்னரான சுயாஷ் சர்மாவை கடைசி நேரத்தில் ரூ.2.6 கோடிக்கு கைப்பற்றியது. சாஹல் அளவிற்கு இல்லையென்றாலும், சுயாஷ் சர்மா கேகேஆர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார்.
முதல் நாள் ஏலம் முடிவில் ஆர்சிபி அணி மொத்தமாக ரீடென்ஷன் உட்பட 9 வீரர்களை வாங்கியுள்ளது. இதற்காக மொத்தமாக ரூ.89.35 கோடி செலவு செய்துள்ளது. கையிருப்பில் இன்னும் ரூ.30.65 கோடி இருக்கும் நிலையில், 2வது நாள் ஏலத்தில் எப்படி செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் ஆல்ரவுண்டர், ஸ்பின்னர்கள், பேக் அப் வீரர்கள் என்று குறைந்தது 11 முதல் 13 வீரர்களை வாங்க வேண்டும்.
ஆர்சிபி அணி விவரம்: விராட் கோலி, பில் சால்ட், ரஜத் பட்டிதர், லியம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, யாஷ் தயாள், ரஷீத் தார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசல்வுட்