ஜெட்டா: இந்திய அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு ஆர்சிபி அணி மிகப்பெரிய யுத்தத்தை சந்தித்து வாங்கியுள்ளது. லக்னோ, மும்பை உள்ளிட்ட அணிகள் தீவிரமாக போராடிய நிலையில், கடைசி வரை ஆர்சிபி அணி பிடிவாதமாக இருந்து அவரை கைப்பற்றியுள்ளது.
34 வயதாகும் புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்காக 12 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல் தொடரிலும் 2011ஆம் ஆண்டு முதலே விளையாடி வரும் இவர், ஐதராபாத் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். இதுவரை 176 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார், 181 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை புவனேஷ்வர் குமாரின் பவுலிங்கில் இருந்து இளம் வீரர்கள் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். இதனால் ஐபிஎல் தொடரில் புவனேஷ்வர் குமார் இம்முறை எந்த அணியால் வாங்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதேபோல் பல்வேறு தரப்பினரும் ஆர்சிபி அணி புவனேஷ்வர் குமாரை வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
டி வில்லியர்ஸ் கூட ஆர்சிபி அணி சின்னச்சாமி மைதானத்தில் பவுலிங் செய்ய புவனேஷ்வர் குமாரை வாங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தின் 2வது நாளில் புவனேஷ்வர் குமாரின் பெயர் அறிவிக்கப்பட்டது. அப்போது உடனடியாக லக்னோ அணி பேடிலை உயர்த்தி ஏலம் கோரியது. இதன்பின் மும்பை அணி கோதாவில் குதிக்க, மெகா ஏலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இருவரும் கண் இமைக்கும் நொடியில் புவனேஷ்வர் குமாரின் விலையை ரூ.10 கோடிக்கு கொண்டு சென்றனர். அப்போது மும்பை அணி ஏலத்தில் இருந்து விலகுவதாக கூற, உடனடியாக ஆர்சிபி அணி பேடிலை தூக்கியது. இறுதியாக ரூ.10.75 கோடிக்கு புவனேஷ்வர் குமாரை ஆர்சிபி அணி நிர்வாகம் வாங்கி அசத்தியுள்ளது.
சின்னச்சாமி மைதானம் போன்ற பவுலிங் செய்ய கடினமான மைதானத்தில் புவனேஷ்வரின் அனுபவம் முக்கிய பங்கு வகிக்கும். ஏற்கனவே அந்த அணியில் ஹேசல்வுட், ரஷீக் தார், சுயாஷ் சர்மா உள்ளிட்டோர் இருக்கும் நிலையில், புவனேஷ்வர் குமார் அவர்களுக்கு எளிதாக வழிக்காட்ட முடியும் என்று பார்க்கப்படுகிறது.