இந்தூர்: சையத் முஷ்டாக் அலி தொடரில் பரோடா அணிக்காக களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் தமிழ்நாடு அணிக்காக ஆடிய விஜய் சங்கர் 3 சிக்சர்களை பறக்கவிட்டது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் வீரரான விஜய் சங்கரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சிஎஸ்கே அணி ரூ.1.2 கோடிக்கு வாங்கி இருக்கிறது. கடந்த 3 சீசன்களாக குஜராத் அணிக்காக நிறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விஜய் சங்கர், இம்முறை சிஎஸ்கே அணிக்காக முதல்முறையாக களமிறங்கவுள்ளார். அதேபோல் ரஞ்சி டிராபி தொடரிலும் விஜய் சங்கர் நல்ல ஃபார்மில் இருந்து வந்தார்.

பவுலிங்கில் வேகத்தை அதிகரிக்க முடியவில்லை என்றாலும், பவர் ஹிட்டிங்கில் விஜய் சங்கர் நன்றாக முன்னேறி இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணிக்காக விஜய் சங்கர் விளையாடி வருகிறார்.
இன்றைய ஆட்டத்தில் பரோடா அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி ஜெகதீசன் மற்றும் விஜய் சங்கரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது. அதிலும் கடைசி நேரத்தில் களமிறங்கிய விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் 6, 6, 1, 6 என்று விளாசி தள்ளினார்.
சிறப்பாக ஆடிய அவர் 22 பந்துகளில் 4 சிக்ஸ் உட்பட 42 ரன்களை விளாசினார். இதன்பின் களமிறங்கிய பரோடா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, சிஎஸ்கே அணி வாங்கியுள்ள குர்ஜப்னித் சிங் பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 29 ரன்களை விளாசி தள்ளினார்.
கடைசி பந்தில் பரோடா அணி வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட போது, அதித் சேத் பவுண்டரியை விளாசினார். அதேபோல் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 69 ரன்களை விளாசி அசத்தினார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் ஃபார்மை ரசிகர்கள் கூர்மையாக கவனித்து வருவது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.