சென்னை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் தமிழக வீரர் நடராஜனை ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் வாங்கியது. இதன் மூலமாக 14 லீக் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில், ஒவ்வொரு பந்துக்கும் ரூ.3.20 லட்சம் ஊதியமாக கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஏலத்தில் தமிழ்நாட்டில் இருந்து 11 வீரர்களுக்கு ஒப்பந்தம் கிடைத்துள்ளது. அதிகபட்சமாக தமிழக வீரர் நடராஜன் ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை வாங்குவதற்கு ஐதராபாத், ஆர்சிபி, டெல்லி உள்ளிட்ட அணிகள் கடுமையாக போட்டி போட்டன. இறுதியாக ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நடராஜனை வாங்குவதில் டெல்லி அணியின் பயிற்சியாளரான ஹேமங் பதானி மிகத் தீவிரமாக இருந்தார். ஏனென்றால் டெல்லி அணியின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், வலிமையான பவுலிங் லைன் அப்பை கட்டமைக்க முயன்றது. அதற்கேற்ப மிட்சல் ஸ்டார்க், நடராஜன், முகேஷ் குமார், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் என்று அமைத்திருக்கிறது.
கடந்த சீசனில் நடராஜன் மிகச்சிறப்பாக செயல்பட்டதால், இந்த சீசனில் பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் தமிழக வீரர்களில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2017ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் நடராஜனுக்கு, இதுதான் மிகப்பெரிய ஊதியமாகும்.
2017 சீசனில் பஞ்சாப் அணி சார்பாக ரூ.3 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். அதன்பின் பெரிதாக சோபிக்க முடியாததால், ஐபிஎல் தொடரில் இருந்து வரும் ஊதியம் குறைந்தது. ஆனால் 2022 மெகா ஏலத்தில் நடராஜன் ரூ.4 கோடிக்கு ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார். தற்போது 3 ஆண்டுகளில் அவரின் ஊதியம் ரூ.10.75 கோடியாக உயர்ந்துள்ளது.
ஒரு சீசனில் 14 லீக் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் நடராஜனால் 336 பந்துகளை மட்டுமே வீச முடியும். இதனை வைத்து கணக்கிடப்பட்டால், நடராஜன் வீசும் ஒவ்வொரு பந்துக்கும் ரூ.3.20 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். ஒருவேளை டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால், நடராஜன் வீசும் ஒரு பந்திற்கு ரூ.2.64 லட்சமாக ஊதியம் வழங்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது.