மும்பை: பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ரிக்கி பாண்டிங், அந்த அணியில் மட்டும் 5 ஆஸ்திரேலியா வீரர்களை வாங்கியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி தான் ரூ.110.50 கோடி என்ற மிகப்பெரிய பர்ஸ் தொகையுடன் பங்கேற்றது. பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷஷாங்க் சிங் இருவரை மட்டுமே அந்த அணி நிர்வாகம் ரீடெய்ன் செய்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி முழுக்க முழுக்க புதிய அணியை கட்டமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் கொண்டு வரப்பட்டார். அதேபோல் மெகா ஏலத்தில் முழு மனதாக ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கும், சாஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரையும் தலா ரூ.18 கோடிக்கும் அந்த அணி நிர்வாகம் வாங்கியது. இவர்களுக்கு பின் ஸ்டாய்னிஸை ரூ.11 கோடிக்கும், மார்கோ யான்சனை ரூ.7 கோடிக்கும் வாங்கியது.
பின்னர் எந்த வீரருக்கும் ரூ.5 கோடிக்கும் மேல் பஞ்சாப் அணி கொடுக்க முன் வரவில்லை. அந்த அணியால் வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஷுதோஷ் சர்மாவை கூட வாங்கவில்லை. இத்தனைக்கும் அவர் ரூ.3.80 கோடிக்கு தான் டெல்லி அணியால் வாங்கப்பட்டிருந்தார். அவரை வாங்க பஞ்சாப் அணி நிர்வாகிகள் மற்றும் பிரீத்தி ஜிந்தா வெகு நேரமாக பேச்சுவார்த்தை நடத்திய போதும் ரிக்கி பாண்டிங் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் மெகா ஏலத்தில் தனது ஆஸ்திரேலியா வீரர்கள் மீதான பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். பஞ்சாப் அணியை தனது சுயசரிதையில் 2 வாரங்களுக்கு முன்னர் தான் கிளென் மேக்ஸ்வெல் கடுமையாக விமர்சித்திருந்தார். சேவாக் மற்றும் பஞ்சாப் அணி நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேக்ஸ்வெல் காட்டமாக விமர்சித்த சில நாட்களிலேயே, மீண்டும் ரூ.4.20 கோடிக்கு அவர் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல் ஸ்டாய்னிஸ் ரூ.11 கோடிக்கும், ஜோஷ் இங்லிஸ் ரூ.2.6 கோடிக்கும், ஆரோன் ஹார்டி ரூ.1.25 கோடிக்கும், சேவியர் பெர்லட் ரூ.80 லட்சத்திற்கும் வாங்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் அணி நிர்வாகம் வாங்கிய 8 வெளிநாட்டு வீரர்களில் 5 பேர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் தான். டெல்லி அணிக்கு பயிற்சியாளராக இருந்த போதும் ரிக்கி பாண்டிங் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.