சென்னை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. மிகச்சிறப்பாக மெகா ஏலம் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தந்த அணிகளின் ரசிகர்கள் தங்கள் அணி எப்படி வந்துள்ளது என்பது தொடர்பாக விவாதித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முன்னாள் சேர்மானான லலித் மோடியின் பேட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
சிஎஸ்கே அணி குறித்தும், அதன் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் குறித்தும் லலித் மோடி பேசியுள்ள விஷயங்கள் ரசிகர்களிடையே பல்வேறு குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் லலித் மோடி பேசுகையில், இந்தியாவில் டி20 லீக் கிரிக்கெட் வெற்றிபெறும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவரான ஸ்ரீனிவாசன் கருதவில்லை. அவருக்கு ஐபிஎல் தொடர் தொடங்கியதே பிடிக்கவில்லை.

ஆனால் ஐபிஎல் தொடர் வெற்றிபெற்ற பின் பலரும் இணைந்துகொண்டார்கள். அந்த நேரத்தில் பிசிசிஐ செயலாளராக ஸ்ரீனிவாசன் தான் இருந்தார். அவருக்கு நேர் எதிரான இடத்தில் நான் இருந்தேன். அப்போது ஐபிஎல் தொடர் தொடங்கிய போது, ஸ்ரீனிவாசன் ஏராளமான தவறான விஷயங்களை செய்தார். அம்பயர் ஃபிக்சிங்கில் ஈடுபட்டார். அதனை நேரடியாக ஒரு குற்றச்சாட்டாக வைத்தார்.
அதேபோல் சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கு சென்னையைச் சேர்ந்த நடுவர்கள் தான் செயல்பட்டனர். அது தவறாக இருந்தது. அதனை வெளிப்படையாக கேள்வி கேட்ட போது, அவர் எனக்கு எதிராக திரும்பினார். இவ்வளவு ஏன், ஐபிஎல் ஏலத்தில் கூட அவர் ஃபிக்ஸிங் செய்தார். அவர் சிஎஸ்கே அணியில் இங்கிலாந்து வீரர் ஃபிளின்டாஃப் வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.
அந்த தகவல் மற்ற அனைத்து அணிகளுக்கும் நன்றாக தெரியும். அவர் கேட்டதை செய்து கொடுக்கவில்லை என்றால், ஐபிஎல் தொடரை ஸ்ரீனிவாசன் நடத்தவிட மாட்டார். அவர் ஒரு தடையாக இருப்பார். அதனால் நாங்களே அனைத்து அணிகளையும் ஃபிளின்டாஃப்-க்கு பேடிலை தூக்க வேண்டாம் என்று கூறினோம். அதனை ஒவ்வொரு அணிகளிடலும் நானே கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியிலேயே, ஐபிஎல் தொடர் எனது சிந்தனையில் உருவான தொடர் என்றும் கூறியுள்ளார். 2016 மற்றும் 2017 ஆகிய இரு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்கப்பட்டது. மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு காரணமாக இந்த தடை கொண்டு வரப்பட்டது. உரிமையாளர்களின் தவறால் இந்த சிக்கலில் சிஎஸ்கே அணி சிக்கியது.
மேலும், லலித் மோடி கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையில் எந்த ஆதாரமும் கிடையாது. ஏனென்றால் 2009ஆம் ஐபிஎல் ஏலத்தில் ஃபிளின்டாஃபை அதிக தொகை கொடுத்து சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கியது. லலித் மோடி சொல்வது போல் நடந்திருந்தால், அவரை குறைந்த தொகையிலேயே சிஎஸ்கே அணி வாங்கயிருக்க முடியும். அதேபோல் ஃபிளின்டாஃப் அந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடிவிட்டு தேசிய அணிக்கு திரும்பிவிட்டார்.
இதனையறிந்தே ஃபிளின்டஃபை சிஎஸ்கே அணி வாங்கியது. சில போட்டிகளில் விளையாடிய ஃபிளின்டாஃப்-க்காக இவ்வளவு பெரிய ரிஸ்கை ஸ்ரீனிவாசன் செய்திருக்க தேவையில்லை. அதேபோல் ஐபிஎல் தொடர் என்பதே கபில் தேவ் நடத்திய ஐசிஎல் தொடரின் மறு உருவாக்கம் தான். ஐசிஎல் தொடரில் விளையாடிய அம்பாதி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி உள்ளிட்டோர் பிசிசிஐ ஒப்பந்தம் கிடைக்காமல் நீண்ட நாட்களாக பாதிப்பை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.