இந்தூர்: திரிபுரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி தொடரில் குஜராத் அணிக்காக களமிறங்கிய உர்வில் படேல் 28 பந்துகளில் 12 சிக்ஸ். 7 பவுண்டரி உட்பட சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர். இதன் மூலமாக இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற புதிய வரலாற்றையும் உர்வில் படேல் படைத்துள்ளார்.
சையத் முஷ்டாக் அலி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் 3வது சுற்றில் திரிபுரா அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய திரிபுரா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த நக்வஸ்வாலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி ஆர்யா தேசாய் - உர்வில் படேல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஆர்யா தேசாய் நிதானமாக ரன்கள் சேர்க்க, உர்வில் படேல் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 பந்துகளிலேயே அரைசதம் விளாசிய உர்வில் படேல், அடுத்த 13 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதன் மூலமாக 28 பந்துகளில் 12 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட சதம் விளாசினார்.
இறுதியாக 10.2 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து குஜராத் அணி அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய உர்வில் படேல் 35 பந்துகளில் 12 சிக்ஸ், 7 பவுண்டரி 113 ரன்களை சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். இந்தப் போட்டியில் 28 பந்துகளில் சதம் விளாசியதன் மூலமாக உர்வில் படேல் இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை 2018ஆம் ஆண்டு ஹிமாச்சல் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் போட்டியில் ரிஷப் பண்ட் 32 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை உர்வில் படேல் முறியடித்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேலை ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் எந்த அணியும் வாங்க முன் வரவில்லை.
இவர் கடந்த சீசனில் குஜராத் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டார். ஆனால் மெகா ஏலத்தையொட்டி அவரை குஜராத் அணி ரிலீஸ் செய்தது. மீண்டும் வாங்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், எந்த அணியும் அடிப்படை விலைக்கு கூட பேடிலை உயர்த்தவில்லை. இந்த நிலையில் சையத் முஷ்டாக் அலி தொடரில் சதம் விளாசி இருப்பதால், சில அணிகள் வாங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.