மும்பை: ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு இந்திய அணியின் ரிஷப் பண்ட் லக்னோ அணியால் வாங்கப்பட்டார். ரூ.27 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட ரிஷப் பண்ட்-க்கு வருமான வரி பிடித்தம் போக, எவ்வளவு தொகை ஊதியமாக கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மெகா ஏலத்தில் 10 அணிகள் தரப்பில் 182 வீரர்கள் வாங்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.639.15 கோடி ஊதியம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். இவரை வாங்குவதற்கு ஆர்சிபி, ஐதராபாத் மற்றும் லக்னோ உள்ளிட்ட அணிகள் போட்டிபோட்டன. இறுதியாக ரூ.20.75 கோடிக்கு லக்னோ அணி ரிஷப் பண்ட்-க்கு கொடுக்க முன் வந்தது. அப்போது எந்த அணியும் போட்டியில் இல்லை.
ஆனால் திடீரென டெல்லி அணி ஆர்டிஎம் கார்டை உயர்த்த, லக்னோ அணி உடனடியாக ரிஷப் பண்ட்-ஐ வாங்குவதற்கு ரூ.27 கோடி கொடுக்க தயார் என்று அறிவித்தது. இதனால் டெல்லி அணி நிர்வாகம் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்துவதில் இருந்து பின் வாங்கியது. இதனால் லக்னோ அணி தரப்பில் ரூ.27 கோடி கொடுத்து ரிஷப் பண்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ரிஷப் பண்ட்-க்கு ரூ.27 கோடி ஒப்பந்தத்தில் எவ்வளவு வருமான வரி பிடித்தம் செய்யப்படும், அவருக்கு எவ்வளவு ஊதியம் கிடைக்கும் என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது. தற்போது ரிஷப் பண்ட் ஒப்பந்தமான ரூ.27 கோடியில் இருந்து மத்திய அரசின் வரியாக ரூ.8.1 கோடி கழிக்கப்படும். இதன் காரணமாக ரூ.18.9 கோடி மட்டுமே ஊதியமாக கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் ஐபிஎல் தொடரின் போது ரிஷப் பண்ட் காயமடைந்தால், அவருக்கு முழு ஊதியம் அளிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஐபிஎல் தொடரின் போது ரிஷப் பண்ட் காயமடைந்தாலும் அவருக்கு முழு ஊதியம் கிடைக்கும். ஆனால் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ரிஷப் பண்ட் காயமடைந்தால், அவருக்கு ஊதியம் அளிக்கப்படாது. அதற்கு மாற்றாக அந்த அணி நிர்வாகம் வேறு இந்திய வீரரை ஒப்பந்தம் செய்யலாம்.
அப்படி யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், லக்னோ அணிக்கு இன்சூரன்ஸ் பாலிசி மூலமாக பிசிசிஐ முழு தொகையையும் வழங்கிவிடும். இதனால் யாருக்கும் எந்த நஷ்டமும் ஏற்படாது என்று தெரிய வந்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை முழு சீசனிலும் பெஞ்சில் உட்கார்ந்து இருந்தாலும் முழு ஊதியமும் அளிக்கப்படும். ஒரு வேளை சொந்த காரணங்களால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினால், அவருக்கு எத்தனை போட்டிகளில் விளையாடினாரோ அதற்கேற்ப ஊதியம் கணக்கிட்டு அளிக்கப்படும்.