ஜெட்டா: இந்திய அணிக்காக விளையாடி வரும் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலீல் அஹ்மத்தை ரூ.4.80 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இதன் மூலமாக முஸ்தாஃபிசுர் ரஹ்மானின் இடத்தை எளிதாக நிரப்ப முடியும் என்பதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் நட்சத்திர வீரர்கள் பின்னால் செல்லாமல், சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கான்வே, கடந்த சீசனில் அசத்திய ரச்சின் ரவீந்திரா, தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் த்ரிப்பாட்டி உள்ளிட்டோரை வாங்கி ஆச்சரியம் கொடுத்தது.

சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் நிரப்பட்டுள்ள நிலையில், என்ன மாதிரியான பவுலர்களை வாங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும், கட்டர்ஸ் வீசக் கூடிய பவுலர்களால் எளிதாக ஜொலிக்க முடியும். அதற்கு பிராவோ மற்றும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலீல் அஹ்மத்தை ரூ.4.80 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. கூடுதலாக சில ரன்களை விட்டுக் கொடுத்தாலும், கலீல் அஹ்மத் எப்போதும் விக்கெட் டேக்கராக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் 57 போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
பவர் பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் வல்லமை கொண்ட கலீல் அஹ்மத், ஆஷிஷ் நெஹ்ராவிற்கு பின் 3 முறை ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தனர். அதேபோல் தோனியின் கண் முன் இந்திய அணிக்காக விளையாடியவர் என்பதால், அவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் சிறப்பாக பயன்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.
இன்னும் சிஎஸ்கே அணி வெளிநாட்டு பவுலர்களை மட்டும் சரியாக வாங்கினால், எளிதாக 6வது ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும் என்று பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஓரூர்க், கோட்ஸி உள்ளிட்ட வீரர்கள் சிஎஸ்கே அணியின் பட்டியலில் இருக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.