ஜெட்டா: இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பரான ஜித்தேஷ் சர்மாவை ரூ.11 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கியுள்ளது. ரூ.7 கோடிக்கு ஜித்தேஷ் சர்மாவின் ஏலம் முடிவுக்கு வந்த நிலையில், திடீரென பஞ்சாப் அணி ஆர்டிஎம் கார்டை காட்டியது. ஆனால் ரூ.4 கோடியை உயர்த்தி ஆர்சிபி அணி ஜித்தேஷ் சர்மாவை பிடிவாதமாக வாங்கி இருக்கிறது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி ரூ.83 கோடி பர்ஸ் தொகையுடன் பங்கேற்றது. கேஎல் ராகுலை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை வாங்காமல் அமைதி காத்தது. அதன்பின் அதிரடி ஆல்ரவுண்டரான லிவிங்ஸ்டனை ரூ.8.75 கோடிக்கு வாங்கியது. அதன்பின் கடந்த சீசனில் கேகேஆர் அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்த பில் சால்ட்-ஐ ரூ.11.5 கோடிக்கு வாங்கி அசத்தியது.

இரு தரமான வீரர்களை ஆர்சிபி அணி வாங்கிய நிலையில், தினேஷ் கார்த்திக்கிற்கு மாற்று வீரரை வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போது இஷான் கிஷன் போன்ற வீரரை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, இந்திய அணிக்காக விளையாடி வரும் ஜித்தேஷ் சர்மா பெயர் அறிவிக்கப்பட்ட போது, உடனடியாக கோதாவில் குதித்தது.
சிஎஸ்கே அணியுடன் தொடர்ந்து போராடி வந்த போது ஜித்தேஷ் சர்மாவை ரூ.7 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கியது. ஆனால் திடீரென பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ஆர்டிஎம் செய்வதாக அறிவித்தது. அப்போது மீண்டும் ஆர்சிபி அணி கூடுதலாக ரூ.4 கோடி கொடுத்து ரூ.11 கோடியாக ஜித்தேஷ் சர்மாவின் விலையை உயர்த்தியது.
இதனால் பஞ்சாப் அணி விலகுவதாக கூறிய நிலையில், ஆர்சிபி அணி ஜித்தேஷ் சர்மாவை பிடிவாதமாக வாங்கியது. இதன் மூலமாக ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டர் ரஜத் பட்டிதர், லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜித்தேஷ் சர்மா என்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டர் வலிமையாக மாறியுள்ள நிலையில், அந்த அணியின் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.