மும்பை: விராட் கோலியை ஒப்பந்தம் செய்ய தவறியதன் விளைவாக, டெல்லி அணி இந்திய யு19 கேப்டன்களை தொடர்ச்சியாக ஐபிஎல் ஏலத்தில் வாங்கி வந்தது. உன்முந்த் சந்த், சஞ்சு சாம்சன், ரிக்கி பூய், ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, யாஷ் துல் என்று ஏராளமான வீரர்கள் டெல்லி அணிக்காக விளையாடி இருக்கின்றனர். இந்த பட்டியலில் விராட் கோலிக்கு பின் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர் பிரித்வி ஷா.
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய யு19 அணியை வெற்றிபெற வைத்தார். அந்த அணியில் அர்ஷ்தீப் சிங், சுப்மன் கில், ரியான் பராக் என்று ஏராளமான நட்சத்திர வீரர்கள் இருந்த போதும், டெல்லி அணி பிரித்வி ஷாவை தான் ஒப்பந்தம் செய்வதது. அதற்கேற்ப அவரும் தொடக்க சில சீசன்களில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.

இதன் காரணமாக 2022ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் பிரித்வி ஷாவை ரூ.7.5 கோடிக்கு டெல்லி அணி ரீடெய்ன் செய்தது. இதன்பின்னர் தான் பிரித்வி ஷாவின் போக்கு வேறு திசைக்கு மாறியது. பயிற்சிக்கு வராமல் இழுத்தடிப்பது, பயிற்சியாளர்களை அவமதிப்பது, ஹோட்டலில் பிரச்சனை செய்வது என்று ஏராளமான பிரச்சனைகளில் ஈடுபட தொடங்கினார்.
இதன் உச்சமாக ரஹானே கேப்டனாக செயல்பட்டு வரும் மும்பை ரஞ்சி டிராபி அணியில் இருந்தே ஒழுக்கமில்லை என்று கூறி நீக்கப்பட்டார். இந்தியாவின் மிக முக்கிய கேப்டன்களில் ஒருவரான ரஹானேவிற்கே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிரித்வி ஷாவின் செயல்பாடுகள் இருந்தது. இது வெட்ட வெளிச்சத்திற்கு வர, ஐபிஎல் மெகா ஏலத்தில் பிரித்வி ஷாவை வாங்குவதற்கு எந்த அணியும் முன்வரவில்லை.
ரூ.75 லட்சம் தான் அடிப்படை விலையாக நிர்ணயித்த போது, அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இதுகுறித்து டெல்லி அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரான முகமது கைஃப் பேசுகையில், ஐபிஎல் தொடரின் போது டெல்லி அணி நிர்வாகிகள் மற்றும் கேப்டன் அனைவரும் அமர்ந்து பிளேயிங் லெவன் குறித்து ஆலோசனை செய்வோம். அப்போது பிரித்வி ஷாவை ஒரு போதும் பிளேயிங் லெனில் சேர்க்க மாட்டோம்.
ஆனால் மறுநாள் காலை வந்த போது, டாஸ் போடுவதற்கு முன் பிரித்வி ஷாவை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம் என்று முடிவு செய்வோம். ஏனென்றால் பிரித்வி ஷா மட்டும் சிறப்பாக செயல்பட்டால், எங்களால் வெல்ல முடியும் என்று நம்புவோம். ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படியே வாய்ப்பினை பெற்ற பிரித்வி ஷா, ஒரு முறை கூட அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
ஐபிஎல் தொடரில் ஏராளமான வீரர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்தவே வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் பிரித்வி ஷா கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்தவில்லை. முதலில் பிரித்வி ஷா தன் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருப்பதை ஏற்க வேண்டும். ஏனென்றால் அனைத்து அணிகளும் அவரை விட்டு விலகியதோடு மட்டுமல்லாமல், கடந்தும் சென்றுவிட்டன.
அவரை வாங்க ஒரு அணியும் வராததை பிரித்வி ஷா அவமானமாக பார்க்க வேண்டும். இனியாவது உள்ளூர் கிரிக்கெட்டில் கன்சிஸ்டன்சியுடன் ரன்களை குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஃபிட்னஸ் பிரச்சனை இருந்து வந்த நிலையில், தற்போது பேட்டிங் ஃபார்மும் மோசமாக இருந்து வருகிறது. சையத் முஷ்டாக் அலி தொடரில் பிரித்வி ஷாவின் பேட்டிங் ஃபார்ம் விமர்சனத்தை சந்தித்துள்ளது.