ஜெட்டா: மும்பை மற்றும் லக்னோஅணிகளுக்காக விளையாடிய நட்சத்திர வீரர் க்ருணால் பாண்டியாவை ரூ.5.25 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் வாங்கியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் 2வது நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாளில் மும்பை, ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் அமைதி காத்த நிலையில் 2வது நாளில் அதிகளவிலான வீரர்களை வாங்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. குறிப்பாக பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களின் ஏலம் இன்று இருப்பதால், ரசிகர்களிடையே அதிக ஆவல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் மும்பை அணிக்காக விளையாடிய வந்த க்ருணால் பாண்டியா, கடந்த மெகா ஏலத்தின் போது லக்னோ அணியால் வாங்கப்பட்டார். தற்போது லக்னோ அணியால் க்ருணால் பாண்டியா விடுவிக்கப்பட்ட சூழலில், அவரை எந்த அணி வாங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அவரும் தம்பி ஹர்திக் பாண்டியா இருக்கும் மும்பை அணியுடன் ஐக்கியம் ஆகுவாரா என்ற கேள்விகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து ஏலதாரராக செயல்படும் மல்லிகா சாகர், 2வது நாளின் 2வது செட்டில் ஆல்ரவுண்டர்களை ஏலம்விட தொடங்கினார். அப்போது க்ருணால் பாண்டியாவின் பெயர் அறிவிக்கப்பட, உடனடியாக ஆர்சிபி அணி களத்தில் குதித்தது. அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலம் கோரிய போது, வேறு எந்த அணியும் ஏலம் கேட்க முன்வரவில்லை.
நீண்ட நேர காத்திருப்புக்கு பின் ராஜஸ்தான் அணியினர் பேடிலை உயர்த்த, இரு அணிகளும் விரைவாக அவரின் விலையை ரூ.5 கோடிக்கு மேல் கொண்டு சென்றனர். இறுதியாக ஆர்சிபி அணி பிடிவாதமாக ரூ.5.25 கோடிக்கு வாங்கியது. தொடர்ந்து லக்னோ அணி ஆர்டிஎம் பயன்படுத்த விருப்பம் இல்லை என்று கூறியதால், ஆர்சிபி நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர்.
ஏனென்றால் க்ருணால் பாண்டியாவால் 4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தலாக பவுலிங் செய்ய முடியும். அதேபோல் கீழ் வரிசையில் களமிறங்கி 12 பந்துகளில் அசால்ட்டாக 25 ரன்களை விளாசுவார். இதனால் ஆர்சிபி அணிக்கு மிகவும் பயனுள்ள வீரராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.