மும்பை: 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி அணிக்காக முகமது சிராஜ் விளையாடி வந்துள்ளார். 7 சீசன்கள் ஆர்சிபி அனிக்காக விளையாடியுள்ள முகமது சிராஜ், விராட் கோலியின் முக்கியமான தளபதியாக இருந்து வந்துள்ளார். ஆர்சிபி அணிக்காக 87 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ், மொத்தமாக 83 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
கடந்த மெகா ஏலத்தின் போது முகமது சிராஜை குறைந்த தொகைக்கு ரீடெய்ன் செய்ய ஆர்சிபி அணி அணுகிய போதும், அவர் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் நேற்று முன் தினம் நடந்த மெகா ஏலத்தில் முகமது சிராஜ் குஜராத் அணிக்காக விளையாட ரூ.12.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரை வாங்க குஜராத், சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் போட்டிபோட்டன.

இறுதியாக குஜராத் அணி முகமது சிராஜை ரூ.12.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. ஆர்சிபி அணியின் கைகளில் ஆர்டிஎம் கார்டு இருந்த போதும், அந்த அணி முகமது சிராஜை வாங்க முன் வரவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், முகமது சிராஜை வாங்கிய பேடிலை கூர ஆர்சிபி அணி நிர்வாகிகள் தூக்கவில்லை. இதனால் ஆர்சிபி அணி ரசிகர்களே சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில் ஆர்சிபி அணியுடனான உறவில் இருந்து பிரிவது குறித்து முகமது சிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலான பதிவை எழுதியுள்ளார். அதில், மை டியர் ஆர்சிபி.. ஆர்சிபி அணியின் ஜெர்சியை அணிந்திருந்த நினைவுகளை எண்ணி பார்க்கும் போது மனதில் நன்றியும், அன்பும் நிறைந்து எமோஷனலாக்குகிறது.. முதல்முறையாக ஆர்சிபி ஜெர்சியை அணியும் போது, இப்படியொரு பந்தம் உருவாகும் என்று நினைத்திருக்கவில்லை.
ஆர்சிபி அணிக்காக முதல் பந்தை வீசியது முதல்.. வீழ்த்திய ஒவ்வொரு விக்கெட்டும்.. விளையாடிய ஒவ்வொரு போட்டியும்.. ரசிகர்களுடன் பகிர்ந்த ஒவ்வொரு நினைவும்.. இந்த பயணத்தை மிகச்சிறந்த ஒன்றாக மாற்றியுள்ளது. ஆர்சிபி அணியுடனான பயணத்தில் ஏராளமான ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். ஆனால் அந்த பயணத்தில் ஒன்று மட்டும் மாறாமல் நிரந்தரமாக இருந்தது.. அது உங்களின் ஆதரவு தான்.
ஆர்சிபி என்பது ஒரு அணி மட்டுமல்ல.. ஒரு உணர்வு.. அங்கு இருப்பது வீட்டில் குடும்பத்தினருடன் இருக்கும் உணர்வை கொடுக்கும்.. சில நேரங்களில் தோல்வியை எதிர்கொள்ளும் போது வெளியில் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு சோகத்தை கொடுக்கும்.. அப்போது மைதானத்தில் இருந்து வரும் உங்களின் குரல்கள், சோசியல் மீடியாவில் வரும் மெசேஜ்கள், உங்களின் ஆதரவு தான் அடுத்த இலக்கை நோக்கி ஓட வைக்கும்.
ஆர்சிபி அணியின் உயிர் ரசிகர்களாகிய நீங்கள் தான். உங்களின் எனர்ஜி, அன்பு, நம்பிக்கை உள்ளிட்டவற்றை எதனுடனும் ஒப்பிட முடியாது. ஒவ்வொரு முறையும் ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் போதும், உங்களின் கனவின் கணத்தையும், நம்பிக்கையையும் உணர்ந்திருக்கிறேன். அதற்காக முழுமனதுடன் செயல்பட்டுள்ளேன். நாங்கள் வீழ்ந்த போது உங்களின் கண்ணீரையும் கண்டிருக்கிறேன்.. நாங்கள் எழுந்த போது உங்களின் கொண்டாட்டத்தையும் பார்த்திருக்கிறேன். ஆர்சிபி ரசிகர்களை போல் உலகில் வேறு எங்கும் இருக்க மாட்டார்கள்.
ஆர்சிபி ரசிகர்களின் அன்பையும், அர்ப்பணிப்பையும், நேர்மையையும் வாழ்வின் ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்ப்பேன். தற்போது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் அடுத்த பயணத்தை தொடங்க உள்ளேன். எனது இதயத்தின் ஒரு பகுதி எப்போதும் ஆர்சிபி அணியுடன் இருக்கும். இது நிச்சயம் குட் பை-க்கான தருணமல்ல.. இது நன்றி சொல்வதற்கான நேரம். என் மீது நம்பிக்கை வைத்ததற்கும், கிரிக்கெட்டை விடவும் மேலான ஒன்றின் அங்கமாக நினைக்க வைத்ததற்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார். இது ஆர்சிபி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.