சென்னை: சிஎஸ்கே அணியுடனான உறவு முடிவுக்கு வந்ததையடுத்து நட்சத்திர வீரர் தீபக் சஹரின் மனைவி ஜெயா பரத்வாஜ் இன்ஸ்டாகிராமில் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். தீபக் சஹர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகி இருந்தாலும், அந்த அணியுடன் தான் என் இதயம் பிணைந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஏராளமான வீரர்கள் இம்முறை வெவ்வேறு அணிகளால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர். மொயின் அலி, ரஹானே உள்ளிட்டோர் கேகேஆர் அணிக்காக வாங்கப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம் மும்பை அணி சிஎஸ்கே அணிக்காக ஆடிய தீபக் சஹர், மிட்சல் சான்ட்னர் இருவரையும் வாங்கியுள்ளது. அதிலும் தீபக் சஹருக்கு ரூ.9.25 கொடுத்து மும்பை அணி வாங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் ஏலத்தொகை ரூ.8.50 கோடியாக இருந்த போது, திடீரென சிஎஸ்கே அணி கோதாவில் குதித்தது. இதனால் அவரை சிஎஸ்கே வாங்கலாம் என்று பார்க்கப்பட்ட போது, மும்பை அணி பிடிவாதமாக இருந்து ரூ.9.25 கோடிக்கு வாங்கியது. இதன் காரணமாக மும்பை அணியின் பவர் பிளே ஓவர்கள் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது.
ஆனால் தீபக் சஹர் சிஎஸ்கே அணியால் வாங்கப்படுவோம் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். மும்பை அணியால் வாங்கப்பட்ட போது கூட, ஜியோ சினிமா நேரலையில் வந்த அவர், பெரிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. வான்கடே மைதானத்தில் எனது பவுலிங் சரியாக இருக்கும் என்று மட்டுமே கூறியிருந்தார். ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா பற்றி கூட ஒரு வார்த்தையும் பேசவில்லை.


இதுகுறித்து தீபக் சஹரின் மனைவி ஜெயா பரத்வாஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்வாரம் செய்து முதல்.. போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய போது, ரசிகர்கள் அனைவரும் நுன் அதனை ஏற்றுக் கொண்டது வரை.. எப்போதும் என் இதயம் சிஎஸ்கே அணியுடன் பிணைந்தே இருக்கும்.. அற்புதமான நினைவுகளுக்கு என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
இது சிஎஸ்கே ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே அணிக்காக 76 போட்டிகளில் விளையாடியுள்ள தீபக் சஹர் 81 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் 2018, 2021 மற்றும் 2023 என்று 3 முறை சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்ற போதும், முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளார்.