மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் நட்சத்திர வீரர் பிரித்வி ஷாவை எந்த அணியும் வாங்க முன் வராதது ரசிகர்களிடையே தொடர் விவாதமாக நடந்து வருகிறது. அவரின் அடிப்படை விலையாக ரூ.75 லட்சம் மட்டும் நிர்ணயிக்கப்பட்ட போதும் கூட யாரும் வாங்கவில்லை. அடுத்த சச்சின், அடுத்த சேவாக் என்று கூறப்பட்டு வந்த பிரித்வி ஷாவுக்கு இப்படியொரு நிலைமையா என்ற ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் பிரித்வி ஷாவை முன்னாள் வீரர்களான முகமது கைஃப், தேர்வு குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். யாரின் பேச்சையும் கேட்காமல் ஆணவமாக செயல்பட்டதன் விளைவே, ஐபிஎல் ஏலத்தில் யாரும் வாங்க முன் வராததற்கு காரணம் என்று கூறி வருகின்றனர். டெல்லி அணிக்காக 6 ஆண்டுகள் விளையாடிய போதும், அந்த அணியும் பிரித்வி ஷாவை கைவிட்டது.

இதுகுறித்து டெல்லி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் பேசுகையில், பிரித்வி ஷா மிகவும் திறமையான வீரர். அவர் பல்வேறு வகையில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளார். என்னை பொறுத்தவரை அடுத்தக் கட்டத்திர்கு வளர்ந்து செல்லும் போது, ஒரு சிறிய அழுத்தம் அல்லது தடை இருப்பது சரியானது என்று கருதுகிறேன்.
சில நேரங்களில் என் வாழ்விலும் அப்படியொரு விஷயம் நடக்க வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன். ஏனென்றால் வளரும் போது நம்மை பலரும் திறமையானவர்கள், ஸ்பெஷலானவர் என்று பாராட்டுவார்கள். பிரித்வி ஷா வளர்ந்து வரும் போது சச்சின் டெண்டுல்கர், விராட் கோலிக்கு பின் உன்னிடம் தான் எம்ஆர்எஃப் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது என்று கூறி வந்துள்ளனர்.
அது ஒவ்வொருவரும் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பொறுத்தது. சிலர் லாரா என்றோ, சிலர் சச்சின் என்றோ அவரை அழைத்து, அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லி வந்தனர். அப்படியொரு சூழலில் தான் பிரித்வி ஷா இருந்தார். மும்பை கிரிக்கெட்டில் ஒவ்வொரு நபரும் அவரை புகழ்ந்து வந்தனர். பிரித்வி ஷாவிற்கு மீண்டும் அப்படியொரு சூழல் அமைய வேண்டும் என்று நினைக்கிறேன்.
இதுதான் வரை நல்ல ஐபிஎல் ஓப்பந்தம், மும்பை அணிக்காக அத்தனை வடிவங்களிலும் களமிறங்கும் வாய்ப்பு, டெல்லி அணியில் தொடக்க வீரர் என்று கிரிக்கெட் பாதை இருந்தது. ஆனால் இப்போது பிரித்வி ஷாவிடம் எதுவும் இல்லை. வரும் காலங்களில் பிரித்வி ஷா கடுமையாக உழைக்க வேண்டிய தேவை உள்ளது. கிரிக்கெட் மீது மீண்டும் காதல் கொண்டு விளையாட தொடங்க வேண்டும்.
வலைப்பயிற்சியை தொடங்குவதோடு மட்டுமல்லாமல், ஃபிட்னஸிலும் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் எங்கே தவறு செய்தோம் என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அதேபோல் அத்தனை விஷயங்களிலும் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தற்போது பிரித்வி ஷா சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.