ஜெட்டா: ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளில் ஆர்சிபி அணி நிர்வாகிகள் செய்த சம்பவம் அந்த அணி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிட்சல் ஸ்டார்க், ரபாடா, போல்ட் உள்ளிட்ட வீரர்களுக்கு பெரிய தொகை கொடுக்காமல், ஹேசல்வுட்டை ரூ.12.50 கோடிக்கு வாங்கியது ஏன் என்று புலம்பி வருகின்றனர்.
ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளில் ஆர்சிபி அணி தரப்பில் லியம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், ஜித்தேஷ் சர்மா, ஹேசல்வுட், ரஷீக் தார், சுயாஷ் சர்மா உள்ளிட்ட வீரர்களை வாங்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட்டை ரூ.12.50 கோடி கொடுத்து ஆர்சிபி அணி நிர்வாகிகள் வாங்கினர்.

லக்னோ, கேகேஆர், மும்பை உள்ளிட்ட 3 அணிகளுடன் மிகப்பெரிய யுத்தத்தை நடத்தி ஆர்சிபி அணி ஹேசல்வுட்டை வாங்கியது. ஏற்கனவே சின்னச்சாமி மைதானத்தில் ஹேசல்வுட் விளையாடி இருந்தாலும், அவரால் எதிரணி பேட்ஸ்மேன்களை மொத்தமாக நடுங்க வைக்கும் ஸ்பெல்லை வீச முடிந்ததில்லை. எப்போதும் அழுத்தம் கொடுத்து ரன்களை கட்டுப்படுத்துவதில் தான் ஹேசல்வுட் கவனம் செலுத்தி இருக்கிறார்.
முதல் ஸ்பெல்லிலேயே எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கொத்தாக வீழ்த்த கூடிய பவுலராக இருந்ததில்லை. சின்னச்சாமி மைதானத்தில் பவர் பிளேவில் விக்கெட் வீழ்த்தக் கூடிய ஒரு நட்சத்திர பவுலர் தான் ஆர்சிபி அணியின் தேவையாக இருந்தது. ஆனால் ஆர்சிபி அணி நிர்வாகமோ, ரன் ரேட்டை கட்டுப்படுத்தி அழுத்தம் கொடுக்கக் கூடிய பவுலருக்கு ரூ.12.50 கோடி கொடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஹேசல்வுட்டை வாங்கிய பின்னர் தான் ட்ரென்ட் போல்ட் பெயர் மெகா ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. மும்பை அணியோ போல்ட்-ஐ குறைந்த தொகைக்கு வாங்க வேண்டும் என்று ஆர்ச்சர், ஹேசல்வுட் உள்ளிட்டோரின் தொகையை ஏற்றிவிட்டது. இதனையறியாமல் ஆர்சிபி ஹேசல்வுட்டை வாங்கி மும்பை அணியின் வலையில் விழுந்துள்ளது.
ஹேசல்வுட்டுக்கு பதிலாக போல்ட் வாங்கப்பட்டிருந்தால் ஆர்சிபி அணியின் பவுலிங் வரிசை வேறு மாதிரி இருந்திருக்கும். அதேபோல் தொடக்கத்தில் முகமது ஷமி ரூ.10 கோடிக்கும், ரபாடா ரூ.10.75 கோடிக்கும், மிட்சல் ஸ்டார்க் ரூ.11.75 கோடிக்கும், நூர் அஹ்மத் ரூ.10 கோடிக்கும் தான் ஏலத்தில் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் விக்கெட் டேக்கராக இருந்துள்ளனர். இவரை விடுத்து ஹேசல்வுட்டை அதிக தொகை கொடுத்து ஆர்சிபி அணி வாங்கியதே ரசிகர்களின் புலம்பலுக்கு காரணமாக அமைந்துள்ளது.