மும்பை: இந்திய அணி வீரர்களில் கிரிக்கெட் மூலமாக அதிக வருமானம் ஈட்டுவோர் பட்டியலில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி இளம் வீரர் ரிஷப் பண்ட் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். ரூ.20.75 கோடியாக ஏலத் தொகை நின்ற போது, லக்னோ அணியை தவிர்த்து ஐதராபாத், ஆர்சிபி அணிகள் போட்டியில் இருந்து விலகின. ஆனால் டெல்லி அணி ஆர்டிஎம் செய்வதாக அறிவித்தது.

இதன்பின் ஏலத் தொகையை ரூ.27 கோடியாக லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா உயர்த்தி அறிவித்தார். இதன்பின் டெல்லி அணியும் ஆர்டிஎம் செய்யாமல் பின் வாங்கியது. இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.
இதன் மூலமாக ஐபிஎல் தொடர் மூலம் ஆண்டுக்கு ரூ.27 கோடி ரிஷப் பண்ட்-க்கு ஊதியமாக கிடைக்கும். அதேபோல் பிசிசிஐ தரப்பில் "பி" பிரிவுக்கான ஒப்பந்தம் ரிஷப் பண்ட்-க்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.30 கோடி கிரிக்கெட் போட்டிகள் மூலமாக மட்டுமே ரிஷப் பண்ட் வருமானம் ஈட்டி வருகிறார். இதன் மூலமாக இந்திய கிரிக்கெட் வீரர்களில் கிரிக்கெட் போட்டிகள் மூலமாக அதிக வருமானம் ஈட்டும் வீரராக பண்ட் உயர்ந்துள்ளார்.
ஏனென்றால் ஐபிஎல் தொடர் மூலமாக விராட் கோலி ரூ.21 கோடியும், பிசிசிஐ ஒப்பந்தம் மூலமாக ரூ.7 கோடியும் வருமானம் ஈட்டி வருகிறார். இதன் மூலமாக விராட் கோலி கிரிக்கெட் போட்டிகள் மூலமாக ரூ.28 கோடி மட்டுமே வருமானம் ஈட்டுகிறார். இன்னொரு பக்கம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடர் மூலமாக ரூ.16.30 கோடியும், பிசிசிஐ ஒப்பந்தம் மூலம் ரூ.7 கோடியும் வருமானம் ஈட்டி வருகிறார்.
இதன் மூலம் மொத்தமாக ரூ.23.30 கோடியாக ரோஹித் சர்மாவின் வருமானம் உள்ளது. இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் பஞ்சாப் அணி அவரை ரூ.26.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் இல்லை என்றாலும், ரோஹித் சர்மாவை விடவும் அதிக ஊதியம் பெறும் வீரராக உயர்ந்துள்ளார்.