ஜெட்டா: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கடைசி சுற்றில் அடிப்படை விலையான ரூ.30 லட்சத்திற்கு மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார். முதல் சுற்றில் அவரின் பெயர் ஏலத்தில் விட்ட போது, மும்பை அணி அர்ஜுன் டெண்டுல்கரை வாங்க முன் வராததால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது மும்பை அணி தங்களின் ஐகானிக் வீரராக சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்தது. 6 சீசன்களாக மும்பை அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கர், 2013ஆம் ஆண்டு மும்பை அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் மும்பை அணியின் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் பணியாற்றி வருகிறார்.

இதனிடையே மும்பை அணியுடன் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதுகுறித்து விசாரிக்கும் போது அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியின் நெட் பவுலராக பணியாற்றி வந்தது தெரிய வந்தது. இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் டவுன் ஆர்டர் பேட்ஸ்மேனான அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியுடன் தொடர்ந்து பயணித்து வந்தார்.
அப்போது முதலே நெபோட்டிஸம் தொடர்பான பேச்சுகள் தொடங்கின. இருந்தாலும் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் முதல்முறையாக தனது பெயரை பதிவு செய்தார். அப்போது மும்பை அணி அவரை அடிப்படை விலையான கு ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது. அதன்பின் 2021 மெகா ஏலத்தின் போது அர்ஜுன் டெண்டுல்கரை வாங்க மும்பை அணி பேடிலை உயர்த்தியது.
ஆனால் லக்னோ அணி திடீரென பேடிலை உயர்த்த, மும்பை அணியின் ஆகாஷ் அம்பானி டென்ஷனை வெளிப்படுத்தினார். இதனால் அவர் ரூ.30 லட்சத்திற்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். அப்போதும் பணம் மற்றும் நெபோட்டிஸம் காரணமாக ரூ.10 லட்சம் ஊதியத்தை சாதாரணமாக உயர்த்தி கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து கடந்த 2 சீசன்களில் மும்பை அணிக்காக 5 போட்டிகளில் விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மும்பை அணி மோசமான தோல்வியை பெற்ற போது, ரசிகர்களின் கவனத்தை திருப்புவதற்காக அர்ஜுன் டெண்டுல்கரை பயன்படுத்தி கொண்டது. அதன்பின் அர்ஜுன் டெண்டுல்கரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் பெயர் அறிவிக்கப்பட்ட போது, எந்த அணியும் அவரை வாங்க முன் வரவில்லை. கேமராக்கள் மும்பை அணி பக்கம் திரும்பிய போதும், ஆகாஷ் அம்பானி கொஞ்சம் கூட அசையாமல் அமைதி காத்தார். இதனால் அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்தது.
மும்பை அணியின் கையிருப்பில் தொகை இருந்த போதும், அவரை வாங்க முன் வரவில்லை. இதனைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் மீண்டும் 2 வீரர்களின் பெயரை ஒவ்வொரு அணிகளின் தரப்பிலும் மீண்டும் ஏலத்தில் விட கொடுக்கப்பட்டது. அப்போது மும்பை அணி தரப்பில் அர்ஜுன் டெண்டுல்கர் பெயர் கொடுக்கப்பட்டு, அவரை அடிப்படை விலையான ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். முதலில் அர்ஜுன் டெண்டுல்கரை வாங்காமல், கடைசி சுற்றில் மும்பை அணி வாங்கியது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.