மும்பை: பிறந்தநாளன்று ஆட்டம், பாட்டமாக இருந்த பிரித்வி ஷாவை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வந்த நிலையில், அவர் பதில் அளித்துள்ளார். எங்கு சென்றாலும் நான் பயிற்சி செய்வதில்லை என்று பேச்சுகள் வரத் தொடங்கிவிட்டதாக கூறிய அவர், ட்ரோல்கள் தன்னை மனதளவில் பாதிப்படைய வைப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் இந்திய அணிக்காக விளையாடிய இளம் வீரரான பிரித்வி ஷாவை அடிப்படை விலையில் கூட எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. கடந்த மெகா ஏலத்தின் போது டெல்லி அணியால் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களில் ஒருவராக பிரித்வி ஷா இருந்தார். ஆனால் இந்த மெகா ஏலத்தில் எந்த அணியும் வாங்க முன் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஃபிட்னஸ் பிரச்சனை, ஒழுங்கீனமாக பயிற்சிக்கு வராதது உள்ளிட்ட சர்ச்சைகள் அவரை சுற்றி வந்தன. அதுமட்டுமல்லாமல் ரஞ்சி டிராபி தொடரின் போது ஒழுக்கமின்மை காரணமாக அந்த அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனை அனைத்து அணிகளின் உரிமையாளர்களும் அறிந்திருந்த நிலையில், எந்த அணியும் அவரை வாங்க ரிஸ்க் எடுக்கவில்லை.
இதனால் சோசியல் மீடியாவில் பிரித்வி ஷாவிற்கு ரசிகர்கள் பலரும் அட்வைஸ் செய்து வந்தனர். இதனிடையே பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் பிரித்வி ஷா ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் அவரை விளாச தொடங்கியுள்ளனர். இதுகுறித்து பிரித்வி ஷா பேசுகையில், சோசியல் மீடியாவில் ஒருவரை ட்ரோல் செய்வது நல்ல விஷயமல்ல.
அதேபோல் அதனை ஒரு மோசமான விஷயம் என்றும் சொல்ல முடியாது. சில நேரங்களில் நாங்கள் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்படுகிறோம். கிரிக்கெட் வீரர்களான நாங்களும் அதனை பார்க்கிறோம். மற்றவர்கள் பார்க்கிறார்களா என்பது தெரியாது. ஆனால் என்னை பற்றி வரும் ட்ரோல்களை நான் பார்க்கிறேன். அது மனதளவில் என்னை பாதிப்படைய வைக்கிறது.
அதற்காக ரசிகர்களை குற்றம் சொல்லவில்லை. ஆனால் சில நேரங்களில் அப்படியான விஷயங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம், பிரித்வி ஷா பயிற்சி செய்வதில்லை என்று பேசுகிறார்கள். அந்த வீடியோ எனது பிறந்தநாளன்று எடுக்கப்பட்ட ஒன்று தான். சகோதரிகள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து டான்ஸ் ஆடிய போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியான பின் ட்ரால் செய்யப்பட்டேன்.
அந்த ஒருநாள் கூட நான் கொண்டாட்டமாக வாழக் கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணிக்காக பிரித்வி ஷா விளையாடி வருகிறார். இந்த சீசனில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் பிரித்வி ஷாவிற்கு கடைசி நேரத்தில் கூட ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.