ஜெட்டா: கடந்த 4 சீசன்களாக கேகேஆர் அணிக்காக விளையாடி வந்த வெங்கடேஷ் ஐயரை மீண்டும் அந்த அணி ரூ.23.75 கோடிக்கு வாங்கி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உணவு இடைவேளைக்கு பின்னரே ஆல்ரவுண்டர்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இதில் பிளே ஆஃப் சுற்றில் மிகச்சிறப்பாக செயல்பட்ட வெங்கடேஷ் ஐயரின் பெயர் ஏலத்திற்கு வந்தது. அப்போது உடனடியாக ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் நேரடியாக கோதாவில் குதித்தன.

ஆர்சிபி கைசவம் ரூ.74 கோடியும், கேகேஆர் அணியின் கைகளில் ரூ.51 கோடியும் இருந்தது. இதனால் வெங்கடேஷ் ஐயரை விடுவதற்கு இருவரும் கொஞ்சம் கூட தயங்காமல் விரைவாக ரூ.22 கோடிக்கும் அதிகமாக சென்றனர். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி தரப்பில் வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு கொண்டு சென்றது.
இறுதியாக ஆர்சிபி அணி பின் வாங்கிய நிலையில், கேகேஆர் அணி வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு வாங்கியது. 2021 சீசன் முதலே கேகேஆர் அணிக்காக விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர், இம்முறையும் கேகேஆர் அணிக்காக விளையாடவுள்ளார். இந்த மெகா ஏலத்தில் முதல் வீரராக வெங்கடேஷ் ஐயரை கேகேஆர் வாங்கியுள்ளது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அந்த அணியில் ரிங்கு சிங், சுனில் நரைன், ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணா மற்றும் ரமன்தீப் சிங் ஆகிய வீரர்கள் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெங்கடேஷ் ஐயரை வாங்கி இருக்கிறது. இதன் மூலமாக கேகேஆர் அணி தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களை தக்க வைக்க எவ்வளவு தூரம் போராடும் என்று பார்க்கப்படுகிறது.