பெங்களூர்: ஐபிஎல் மெகா ஏலத்தில் வில் ஜாக்ஸை ஆர்டிஎம் மூலமாக ஆர்சிபி அணி வாங்காதது ஏன் என்று அந்த அணியின் ஆலோசகரான தினேஷ் கார்த்திக் விளக்கம் கொடுத்துள்ளார். பில் சால்ட், லிவிங்ஸ்டன் மற்றும் டிம் டேவிட் ஆகிய 3 வீரர்களும் இருக்கையில், எதற்காக வில் ஜாக்ஸை ஆர்டிஎம் செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிஎம் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரும், ஆர்சிபி அணியின் முக்கிய வீரருமான முகமது சிராஜை தக்க வைக்காமல், குஜராத் அணிக்கு தாரை வார்த்தது. அதேபோல் இங்கிலாந்து அணியில் வில் ஜாக்ஸை ஆர்டிஎம் மூலம் வாங்காமல், மும்பை அணிக்கு ஆர்சிபி விட்டுக் கொடுத்தது.

இன்னொரு பக்கம் கேஎல் ராகுலை வாங்க முயற்சிக்காமல், மீண்டும் விராட் கோலியை சுற்றியே அணியை கட்டமைத்திருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்களை நம்பாமல், மீண்டும் வெளிநாட்டு பேட்ஸ்மேன்களை கொண்டு பேட்டிங் லைன் அப்பை அமைத்திருக்கிறது. இப்படி ஆர்சிபி அணி மெகா ஏலத்தில் மிகப்பெரிய சொதப்பல்களை செய்திருக்கிறது.
இதுகுறித்து ஆர்சிபி அணியின் ஆலோசகரும், பேட்டிங் பயிற்சியாளருமான தினேஷ் கார்த்திக் பேசுகையில், ஆர்சிபி அணியின் மிகச்சிறந்த பவுலர்களில் முகமது சிராஜ்-ம் ஒருவர். ஆனால் மெகா ஏலத்தின் அழகே 2 நாட்கள் நடப்பது தான். 2 நாட்களும் நட்சத்திர வீரர்கள் வருவார்காள். அதேபோல் ஆர்சிபி அணியின் தேவை என்னவென்பதை உணர்ந்து, பேடிலை தூக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்.
சிராஜை வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தே மெகா ஏலத்தில் பங்கேற்றோம். ஆனால் ஒரு கட்டத்தில் சிராஜின் மதிப்பு உயர்ந்து கொண்டே போனது. மெகா ஏலத்தின் போது இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் இருக்கும் போது, கொஞ்சம் கூடுதலாக பணம் செலவழித்தாலும், சிக்கல் ஏற்படும். அதுதான் முகமது சிராஜை ஆர்டிஎம் மூலம் வாங்க முடியாததற்கு காரணமாக அமைந்தது.
அதேபோல் வில் ஜாக்ஸை ஆர்டிஎம் மூலம் ஏன் வாங்கவில்லை என்று பலரும் கேட்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏனென்றால் ஆர்சிபி அணியின் டாப் ஆர்டருக்கான பில் சால்ட்-ஐ வாங்கியுள்ளோம். மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெல் இடத்தை நிரப்ப லிவிங்ஸ்டன் கொண்டு வரப்பட்டார். அதேபோல் ஃபினிஷர் ரோலில் டிம் டேவிட் கொண்டு வரப்பட்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் பவுலிங்கில் ஹேசல்வுட் வாங்கப்பட்டுள்ளார். இதனால் வில் ஜாக்ஸை வாங்க வேண்டும் என்பது தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும். முகமது சிராஜ் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரையும் மீண்டும் வாங்க முடியாதது சோகமான விஷயம் தான். ஆனால் இரு வீரர்களும் சிறந்த அணிகளுக்கு சென்றுள்ளார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.