ஜெட்டா: தமிழ்நாடு ரஞ்சி அணிக்காக விளையாடி வரும் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான குர்ஜப்னித் சிங்கை சிஎஸ்கே அணி ரூ.2.20 கோடிக்கு வாங்கியுள்ளது. இவர் டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணிக்காக விளையாடி வந்த நிலையில், தற்போது சிஎஸ்கே அணிக்காக களமிறங்கவுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தின் 2வது நாளில் சிஎஸ்கே அணி இதுவரை சாம் கரண், தீபக் ஹூடா, ஷேக் ரஷீத், முகேஷ் சவுத்ரி மற்றும் அன்சுல் கம்போஜ் உள்ளிட்ட வீரர்களை வாங்கி இருந்தது. இதனைத் தொடர்ந்து இளம் வேகப்பந்துவீச்சாளர்களை சிஎஸ்கே அணி தீவிரமாக தேடி வந்த நிலையில், ஏலத்தில் குர்ஜப்னித் சிங்கின் பெயர் ஒலிக்கப்பட்டது.

அப்போது சில நிமிடங்கள் யோசனைக்கு பின் உடனடியாக லக்னோ அணி பேடிலை உயர்த்தியது. இதன்பின் சிஎஸ்கே அணியும் கோதாவில் குதிக்க, ரசிகர்களிடையே ஆச்சரியம் ஏற்பட்டது. இதன்பின் லக்னோ அணி விலகிக் கொள்ள, தொடர்ந்து குஜராத் அணியும் போட்டிக்கு வந்தது. இறுதியாக சிஎஸ்கே அணி குர்ஜப்னித் சிங்கை ரூ.2.20 கோடிக்கு வாங்கியுள்ளது.
குர்ஜப்னித் சிங்கை பொறுத்தவரை 25 வயதாகும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆவார். ஹரியானாவைச் சேர்ந்தவர் என்றாலும், 7 ஆண்டுகளுக்கு முன்பே கிரிக்கெட் கனவுடன் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இதன்பின் கல்லூரி அணியில் விளையாடி வந்த அவர், பின்னர் டிஎன்சிஏ-வின் 3வது டிவிஷன் தொடரில் எக்மோர் அணிக்காக விளையாடி வந்துள்ளார்.
இதன்பின் இந்தியா சிமெண்ட்ஸ் கண்ணில்பட உடனடியாக அவருக்கு டிஎன்பிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் அஸ்வின் வழிநடத்தி வரும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2021 சீசனில் அறிமுகமாகினாலும், 2023 சீசனில் தான் குர்ஜப்னித் சிங்கிற்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
பின்னர் தமிழ்நாடு அணிக்காக புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் விளையாடிய போது, இவரால் நீண்ட ஸ்பெல் வீச முடியும் என்று தெரிய வந்தது. இதன் காரணமாக உடனடியாக தமிழ்நாடு ரஞ்சி அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் செளராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் குர்ஜப்னித் சிங் அறிமுகம் செய்யப்பட, முதல் போட்டியிலேயே புஜாரா விக்கெட் உட்பட 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதேபோல் கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் நெட் பவுலராகவும் இருந்து வந்துள்ளார். நன்றாக ஸ்விங் செய்யக் கூடிய பவுலராக உள்ள குர்ஜப்னித் சிங்கிற்கு, அண்மையில் இந்திய அணி வீரர்கள் சென்னையில் விளையாடிய போது அவர்களுக்கு பவுலிங் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது இந்திய அணி வீரர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி குர்ஜப்னித் சிங்கை ரூ.2.20 கோடி கொடுத்து மெகா ஏலத்தில் வாங்கியுள்ளது. பெஞ்சில் தான் ஏராளமான போட்டிகளில் அமர வேண்டிய சூழல் இருந்தாலும், தொடர்ந்து ஜாம்பவான்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் சாம் கரண் உள்ளிட்ட வீரர்களுக்கு காயமடைந்தால், இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.