ஜெட்டா: ராஜஸ்தான் அணி தரப்பில் ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள 13 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி கடந்த வந்த பாதை ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 வயதிலேயே அவரின் தந்தை கிரிக்கெட் விளையாட வைத்துள்ள நிலையில், 9 வயதில் அகாடமியில் சேர்த்திருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை இந்திய யு19 அணிக்காக விளையாடி வரும் 13 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். ஐபிஎல் மெகா ஏலத்தில் 13 சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கியதன் மூலமாக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதனால் யார் இந்த சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி என்று ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 2011ஆம் ஆண்டு பிறந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு 4 வயதிலேயே கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் வந்துள்ளது. இதனை கவனித்த அவரின் தந்தை சஞ்சீவ், வீட்டின் பின்புறம் சிறிய இடம் ஒதுக்கி கொடுத்துள்ளார்.
அதன்பின் சமஸ்திபூர் பகுதியில் அமைந்துள்ள கிரிக்கெட் அகாடமியில் 9 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். 9 வயதிலேயே வயதை மீறிய கிரிக்கெட் திறமையை சூர்யவன்ஷி வைத்திருந்ததை அங்கிருந்த பலரும் கண்டறிந்துள்ளனர். இதன்பின் 2.5 ஆண்டுகள் அங்கு பயிற்சியை பெற்ற அவர், 12 வயதிலேயே வினோ மன்கட் டிராபியில் விளையாடுவதற்கான ட்ரையஸில் பங்கேற்றுள்ளார்.
ஆனால் வயது பிரச்சனையால் வைபவ் சூர்யவன்ஷியை தேர்வு செய்வதில் சில தாமதம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் கடைசி நேரத்தில் வினோ மன்கட் டிராபியில் விளையாடுவதற்காக வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டுள்ளார். அதன்பின் முன்னாள் ரஞ்சி வீரரான மனீஷ் ஓஜாவிடம் பயிற்சிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து சூர்யவன்ஷியின் பயணம் உச்சத்திற்கு சென்றுள்ளது.
அந்த வினோ மன்கட் டிராபியில் மட்டும் 5 போர்ட்டிகளில் விளையாடி 400 ரன்களை குவித்திருக்கிறார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் விரைவாக பிரபலமாக தொடங்கியது. அதன்பின் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான தொடரில் இந்தியா யு19 அணி பங்கேற்றது. 4 நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய யு19 அணியில் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டார்.
அந்த தொடரில் 58 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இதன்பின் பீகார் ரஞ்சி அணிக்காக விளையாடி வருகிறார். அதுமட்டுமல்லாமல் யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இதனால் வரும் காலத்தில் மகளிர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் ஷஃபாலி வர்மாவை போல் வைபவ் சூர்யவன்ஷியும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.