
விதிமுறைகள்
மெகா ஏலம் குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களும், குறைந்தபட்சமாக ஒரு அயல்நாட்டு வீரர்கள் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா என முக்கிய அணி வீரர்களை மாற்றி அமைக்க ஆலோசித்து வருகின்றன.

டெல்லி அணியின் திட்டம்
இந்நிலையில் ஐபிஎல்-ல் கலக்கி வரும் டெல்லி அணி தங்களது திட்டத்தை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த அணியின் சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். அதில், டெல்லி அணியில் ஒரே ஒரு வெளிநாட்டு வீரராக ஆன்ரிக் நோர்க்கியா தக்கவைப்படவுள்ளார். இந்திய வீரர்களில் பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் ஆகியோரை அணியில் நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாவது வீரராக எந்த இந்திய வீரரை தக்கவைக்கப்போகிறது என்பதற்கு தான் தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது.

புறக்கணிக்கப்படும் சீனியர்கள்
13வது சீசன் வரை டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தானும் (அஸ்வின்) தக்கவைக்கப்பட வாய்ப்பில்லை. அப்படி தக்கவைக்க அவர்கள் முடிவு செய்திருந்தால், இந்நேரம் எனக்கு தெரிந்திருக்கும் என அஸ்வின் தெரிவித்தார். இதன் மூலம் சீனியர் வீரர்களை கைவிட்டு, இளம் வீரர்களையே டெல்லி அணி முக்கியத்துவம் கொடுத்து எடுக்கவுள்ளது தெளிவாக தெரிகிறது.

டெல்லி அணி முனைப்பு
ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணி இன்னும் ஒருமுறைகூட கோப்பையை வெல்லவில்லை. 13ஆவது சீசனில் இறுதிப் போட்டிவரை முன்னேறிய அந்த அணி, 14ஆவது சீசனின் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தது. ஆனால், பிளே ஆஃப் சுற்றில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால், அடுத்த சீசனிலாவது கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அந்த அணி நிர்வாகம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











