மும்பை: கேகேஆர் அணி நிர்வாகிகளை என்னை மீண்டும் வாங்குவதற்காக மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டதே மகிழ்ச்சி என்று இங்கிலாந்து வீரர் பில் சால்ட் தெரிவித்துள்ளார். அதேபோல் விராட் கோலியுடன் தொடர்ந்து பேசி வந்திருப்பதாக கூறிய அவர், இனி அவருடன் விளையாடப் போவது உற்சாகமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் கடந்த சீசனில் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர் பில் சால்ட். தொடக்க வீரராக களமிறங்கி 182 ஸ்ட்ரைக் ரேட்டில் 432 ரன்களை விளாசினார். இதனால் பில் சால்ட்-ஐ வாங்க கேகேஆர் அணி நிர்வாகம் நிச்சயம் தீவிரமாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சாம்பியன் அணிகளுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால், மற்ற அணிகள் சாம்பியன் அணியில் உள்ள வீரர்களை வாங்குவதில் அதிக முயற்சியை மேற்கொள்வார்கள். இந்த முறையும் பில் சால்ட்-ஐ வாங்க மும்பை, ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் போட்டி போட்டன. கேகேஆர் அணி அவருக்கு ரூ.11.25 கோடி வரை கொடுக்க முன் வந்தது.
ஆனால் ஆர்சிபி அணி ரூ.11.50 கோடி கொடுத்து பில் சால்ட்-ஐ வாங்கியது. இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் இணைந்து பில் சால்ட் ஆர்சிபி அணிக்காக தொடக்கம் கொடுக்க உள்ளார். இதுகுறித்து பில் சால்ட் பேசுகையில், கேகேஆர் அணி ரீடெய்ன் செய்யாதது குறித்து பெரிதாக சிந்திக்கவில்லை. ஏனென்றால் ஐபிஎல் தொடரை வென்ற அணி என்பதால், இருப்பதிலேயே அவர்களின் பணி தான் கடினமானதாக இருக்கும்.
ஏனென்றால் எந்த வீரரை வாங்குவது, எந்த வீரரை விடுவது என்ற குழப்பம் உச்சத்தில் இருக்கும். ஆனால் மெகா ஏலத்தில் கேகேஆர் அணி எனக்காக கடைசி வரை போராடினார்கள். எப்படியாவது மீண்டும் அணிக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆர்வம் காட்டினார்கள். ஆனால் போதுமான பணம் இல்லாததால், அவர்களால் என்னை வாங்க முடியவில்லை. இதனால் ஆர்சிபி அணி என்னை வாங்கி இருக்கிறது.
விராட் கோலி மீது எப்போதும் அளவுக்கடந்த மரியாதை இருக்கிறது. அவருக்கு எதிராக விளையாடினாலும், நாங்கள் சில முறை பேசி இருக்கிறோம். சில உரையாடலின் போது சில ஜோக்ஸை பரிமாறிக் கொண்டுள்ளோம். இப்போது முதல்முறையாக விராட் கோலியுடன் இணைந்து விளையாட போகிறேன். அது கொஞ்சம் ஆர்வமாக இருக்கிறது. ஆர்சிபி அணியின் ஸ்டைல் எப்போதும் அட்டாக் மட்டும் தான். கடந்த காலங்களிலும் அட்டாக்கிங் ஸ்டைலில் விளையாடுவதில் மிக தெளிவாக இருந்திருக்கிறார்கள்.
சில அணிகள் விளையாடுவதை மட்டுமே டிவியில் பார்க்க பிடிக்கும். அதில் ஆர்சிபி அணியும் ஒன்று. அதேபோல் ஆண்டி பிளவர் மற்றும் மோ போபட் ஆகியோரும் ஆர்சிபி அணியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு கீழ் விளையாடுவது இன்னும் மகிழ்ச்சி அளிக்கும். ஏனென்றால் கிரிக்கெட்டை எப்படி அணுக வேண்டும் என்பதில் அனைவரும் ஒரே சிந்தனையுடன் செயல்படக் கூடியவர்கள் என்று தெரிவித்துள்ளார்.