
ஐபிஎல் மெகா ஏலம்
ஒவ்வொரு முறையும் ஏலத்தின் போது வீரர்கள் மீது பல்வேறு கோடிகளில் அணிகள் ஏலம் கேட்கும். கடந்த முறை தென்னாப்பிரிக்க கிறிஸ் மோரிஸ் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகையாக ரூ.16.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்தாண்டு மெகா ஏலத்தில் ரூ.20 கோடிக்கு மேல் சென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனக்கூறப்படுகிறது.

அதிக தொகைக்கான வாய்ப்பு
குறிப்பாக லக்னோ அணி ஏற்கனவே கே.எல்.ராகுலை ரூ.17 கோடிக்கு நேரடி ஒப்பந்தம் செய்துள்ளது. சீனியர்களின் தொகை உயரும் அதே நேரத்தில் இளம் வீரர்களுக்கான தொகைகளும் அதிகரிக்கவுள்ளது. U19 உலகக்கோப்பை தொடரை சமீபத்தில் இந்திய அணி வென்றிருப்பதால் அதில் இருந்து பல வீரர்களும் ஏலத்தில் போவார்கள்.

கட்டுப்பாடு தேவை
இந்நிலையில் அவர்களை கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், அண்டர் 19 வீரர்களின் சம்பளத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் சில U-19 வீரர்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என நினைக்கிறேன். அவர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவார்களா என்பதற்கு உத்திரவாதம் ஏதும் இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியவர்கள் கூட ஐபிஎல் தொடரில் சொதப்பி இருக்கின்றனர். ஏனெனில் ஐபிஎல் தொடரின் தரம் என்பது மிகப் பெரியதாகும்.

பணம் திறமையை மறைக்கும்
சில வீரர்களுக்கு திடீரென அதிக பணம் கிடைப்பதால் கிரிக்கெட் மீது அவர்களின் கவனம் மாறிவிடுகிறது. எனவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களுக்கு ரூ. 1 கோடி என்ற அதிகபட்ச தொகையை சம்பளமாக நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் அவர்களும் அதிக பணத்திற்காக கடினமாக உழைக்க வேண்டும் என நினைப்பார்கள். ஏனென்றால் பணம் எளிதாக கிடைத்து விட்டால் சில திறமைகள் இளமையிலேயே காணாமல் போகிவிடும். இதற்கு முன் இது போன்ற எத்தனையோ வீரர்கள் பணத்தால் காணாமல் போயுள்ளனர்.


Click it and Unblock the Notifications