சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முதுகெலும்பாக விளங்கும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்காகப் பரிமாற்றம் செய்ய இரு அணிகளும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி தற்போது இறுதி நிலையை எட்டி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வரை வெறும் யூகமாக இருந்த இந்தச் செய்தி, தற்போது இரு அணி நிர்வாகங்களுக்கு இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நிலைக்கு நகர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை என்றாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரீரு நாட்களில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் ஏல விதிகளின்படி, ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருமே தங்கள் அணிகளால் தலா ₹18 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட வீரர்கள். இதனால், இருவரையும் நேரடியாகப் பரிமாற்றம் செய்வதில் சம்பளப் பிரச்சினை ஏதும் இல்லை. இந்த ஒப்பந்தம் எளிதாக முடிந்திருக்க வேண்டியது.
ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த நேரடிப் பரிமாற்றத்திற்குச் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஜடேஜாவைப் போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரரை விட்டுக்கொடுப்பதால், சஞ்சு சாம்சனுடன் கூடுதலாக மற்றொரு வீரரையும் சிஎஸ்கே-விடம் இருந்து பெறுவதில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
இந்த ஒப்பந்தத்தில் முட்டுக்கட்டையாக இருப்பது, ராஜஸ்தான் அணி கேட்கும் அந்த கூடுதல் வீரர்தான். கடந்த சீசனின் பாதியில் சிஎஸ்கே அணியில் இணைந்து, தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்த தென்னாப்பிரிக்க இளம் புயலான டிவால்ட் பிரேவிஸ்ஸை ராஜஸ்தான் அணி கேட்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக சர்வதேச டி20 லீக் போட்டிகளில் பிரேவிஸ் காட்டி வரும் அபார ஃபார்ம், அவர் மீது பல அணிகளின் கவனத்தைத் திருப்பியுள்ளது.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது நிலையில் மிகவும் உறுதியாக உள்ளது. உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜாவையே விட்டுக்கொடுப்பது ஒரு மிகப் பெரிய முடிவு. இந்த நிலையில், டிவால்ட் பிரேவிஸையோ அல்லது வேறு எந்த வீரரையோ கூடுதலாகத் தர முடியாது என்பதில் சிஎஸ்கே தெளிவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த மெகா டிரேட் குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு முன்பாக, 36 வயதான ஜடேஜாவிடம் சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, இந்த ஒப்பந்தம் குறித்த இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கைகளில் உள்ளது.
சிஎஸ்கே உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் போன்ற மற்ற அணிகளுடனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தொடர்பில் இருப்பதாகத் தெரிகிறது.
இருப்பினும், சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை, டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் என ஏற்கெனவே வலுவான தொடக்க வீரர்கள் இருப்பதால், சஞ்சு சாம்சனை வாங்குவதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த மெகா டிரேட் நடக்குமா, இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ராஜஸ்தான் அணி தனது நிபந்தனையைத் தளர்த்திக் கொண்டு நேரடிப் பரிமாற்றத்திற்குச் சம்மதிக்குமா, அல்லது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீரர் பரிமாற்றம் வெறும் பேச்சுவார்த்தையுடன் முடிந்துவிடுமா?.