சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து, ரசிகர்கள் அதை மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். இந்தப் போட்டியில் தோனி வெற்றிக்காக ஆடாமல் நிதானமாக ஆடியது விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது. மேலும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஒட்டுமொத்தமாக மிக மோசமாக இருந்தது என்பதையும் கேலி செய்துள்ளனர். இது குறித்த சில மீம்ஸ்கள்:
நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி சேஸிங் செய்தபோது தோல்வி கிட்டத்தட்ட உறுதியானதற்குப் பிறகே விஜய் சங்கரும், தோனியும் சிக்ஸர்களை அடித்தனர். அதை வைத்து "லப்பர் பந்து" படத்தில் வரும் காட்சியை சுட்டிக்காட்டி, "என் மாப்பிள்ளை மேட்ச் தோற்கிறோம்னு தெரிஞ்ச அப்புறம்தான் சிக்ஸ் அடிப்பான்" என்று கிண்டல் செய்துள்ளனர்.

தோனியின் தீவிரமான ரசிகர்கள் இந்த தோல்வியை கூட கண்டுகொள்ளாமல், "43 வயதில் எப்படி ஒரு மனிதன் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடிக்கிறான்" என அவரை கொண்டாடி வருவதாக ஒரு நையாண்டி மீம் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே அணியின் தோல்வியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவர்களையும் கேலி செய்யும் விதமாக ஒரு மீம் வெளியாகியுள்ளது. அதில் "நாங்கள் மூன்று மேட்ச் போராடி தானே தோற்றோம், உன்ன மாதிரி ஒரு கப்பு கூட ஜெயிக்க வக்கில்லாமயா தோற்றோம்" என வடிவேலுவை வைத்து கேலி செய்வது போல ஒரு மீம் உள்ளது.

தோனியிடம் உண்மையான சிஎஸ்கே ரசிகர்கள், "அண்ணே எப்படிண்ணே இந்த மொக்கை டீமை வச்சுக்கிட்டு ஐந்து கப் ஜெயிச்சீங்க?" என்று கேட்பது போல ஒரு மீம் வெளியாகி உள்ளது.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பஞ்சாப் கிங்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பஞ்சாப் அணி அடுத்து சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடுவதால், "சிஎஸ்கேவை அடித்து இந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்து விடலாம்" என்பது போல வடிவேலு "ஆட்டோக்கார தம்பி எங்கே?" என்று கேட்பது போல சிஎஸ்கேவை பஞ்சாப் தேடுவதாக இந்த மீம் வெளியாகி உள்ளது.