மும்பை : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடரில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் போட்டியான சிஎஸ்கே, மும்பை அணிகள் மோதும் ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் மும்பை வான்கடே மைதானத்தில் பயிற்சி செய்து வருகிறார்கள்.
சிஎஸ்கே அணி விளையாடிய 2 போட்டியில் ஒரு போட்டியில் வென்றுள்ளது. மும்பை அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், 2வது போட்டியில் வென்று புள்ளிகள் கணக்கை தொடங்க தீவிரமாக களமிறங்கி உள்ளது. மும்பை அணி பொறுத்தவரை ரோகித், இஷாந்த் கிஷன், சூர்யகுமார் யாதவ் , டிம் டேவிட் போன்ற முன்னணி வீரர்கள் ரன் அடிக்காமலேயே 171 ரன்களை குவித்து இருக்கிறார்கள்.

இதனால் டாப் வரிசை வீரர்கள் ஃபார்ம்க்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் கேப்டன் ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கரின் வழிகாட்டுதலில் பேட்டிங் பயிற்சி செய்துள்ள நிலையில், இஷான் கிஷன் தற்போது தோனியின் உதவியை நாடியுள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிராக கடந்த ஆண்டு இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்ததில் இருந்து ஒரு முமறை கூட அரைசதத்தை தாண்டவில்லை. சஞ்சய் ராமசாமி போல் பழையதை மறந்துவிட்டாரா என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு அவருடைய ஆட்டம் இருக்கிறது. இந்த நிலையில் தோனியும், இஷான் கிஷனும் ஒரே மாநிலம் என்பதால், தோனியிடம் இஷான் கிஷன் சில ஆலோசனைகளை கேட்டுள்ளார்.
இதன் மூலம் நாளை சனிக்கிழமை சிஎஸ்கேக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் செய்யும் தவறை திருத்தி கொண்டு விளையாடுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரருக்கு , நாளை அவருடன் தான் மோதப் போகிறோம் என தெரிந்த தோனி டிப்ஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.