ராணுவத்தில் சேர போராட்டம்.. ஷூ வாங்க கூட காசு இல்லை.. ஆர்சிபி அணியில் இடம்பெற்ற காஷ்மீர் வீரர் கதை
பெங்களூரு : ஐபிஎல் மினி ஏலத்தில் யாருமே அறியப்படாத வீரர்களை குறி வைத்து ஆர் சி பி அணி வாங்கியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக ஐபிஎல் தொடரில் திறமையை நிரூபித்த வீரர்களுக்கு பல வாய்ப்புகள் தேடி வரும்.ஆனால் யாருமே அறியப்படாத வீரர்களும் திடீரென்று பிரபலமாகி விடுவார்கள்.
அந்த வகையில் பெங்களூர் அணி இரண்டாவது யுக்தியை கடைப்பிடித்து பல்வேறு இளம் வீரர்களை பிடித்தது. கையில் இருந்த பணத்தை வைத்து இங்கிலாந்து வீரர் வில் ஜாக்சை மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரீஸ் டோப்லியை ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கும் பெங்களூர் அணி வாங்கியது.
அதன் பிறகு அவர்கள் வாங்கிய அனைத்து வீரர்களுமே சர்வதேச போட்டிகள் விளையாடாத இந்திய அணி வீரர்கள் தான். அதில் குறிப்பாக காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் அவிநாசி பெங்களூரு அணி 60 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.

6 ஆயிரம் பேர்
உம்ரான் மாலிக்கிற்கு பிறகு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல மவுஸ் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவினாஸ் ஒரு முறை கூட கிரிக்கெட் பந்து வீசியது கிடையாது. சீனியர் கிரிக்கெட்டிலும் விளையாடியது கிடையாது. அப்படி இருக்க அவரை பெங்களூரு அணி எப்படி எடுத்தது என்று ஆச்சரியம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. பெங்களூர் அணி வீரர்களை தேர்வு செய்வதற்காக சுமார் 6000 பேரை சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.அதில் அவர்கள் கண்டுபிடித்த வீரர் தான் அவினாஸ்.

ராணுவ வீரர்
தொடர்ந்து 145 கிலோ மீட்டர் வேகத்திற்கு பந்து வீசும் திறமை கொண்ட அவினாஸ் சிங்கை பயிற்சி மையத்திற்கு கொண்டு வந்து பெங்களூர் அணி பட்டை தீட்டி இருக்கிறது. இது குறித்து பேசிய அவினாஸ் சிங், நான் இந்திய ராணுவத்தில் சேர விரும்பினேன். கிரிக்கெட் எனக்கு வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு தான். தொழில் முறை கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்று நான் நினைத்தது கிடையாது. ஆனால் பலமுறை முயற்சி செய்தும் ராணுவத்தில் என்னால் சேர முடியவில்லை. இதனால் நான் கனடாவிற்கு வேலைக்கு செல்ல நினைத்தேன்.

காசு இல்லை
என் தந்தையும் நான் கிரிக்கெட் விளையாடுவதை விரும்பவில்லை. என்னிடம் கிரிக்கெட்டுக்கு பயன்படுத்தும் ஷூ வாங்க கூட காசு இல்லை. என்னுடைய இரண்டு சகோதரர்கள் படித்து வருகிறார்கள். என் தந்தை மட்டும் தான் என் குடும்பத்தை கவனித்து வந்தார். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் அதற்கான உபகரணங்கள் இருக்க வேண்டும். ஆனால் அதன் விலை மிகவும் அதிகம். இதனால் நீ எப்படி அதெல்லாம் வாங்குவாய் என்று என் தந்தை கேட்பார். இதையே காரணம் காட்டி நான் கிரிக்கெட்டில் இருந்து விலக நினைத்தேன்.

நம்பிக்கை
ஆனால் ஆர் சி பி அணியினர் தான் எனக்கு ஊக்கம் கொடுத்து என் தந்தையிடம் பேசி என்னை அழைத்து வந்தார்கள். கடந்த இரண்டு மாதம் ஆர் சி பி அணி பயிற்சி மையத்தில் தங்கி பந்து வீசினேன். அதன் பிறகு ஐபிஎல் ஏலத்தில் என் பெயரை பதிவு செய்து கொண்டேன். தற்போது எனக்கு 60 லட்சம் கிடைத்திருக்கிறது. இதனை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்பை நான் சிறப்பாக பயன்படுத்துவேன் என நம்புகிறேன் என்று அவினாஸ் கூறியுள்ளார். அவிநாஸை கொல்கத்தா அணியினரும் போட்டி போட்டு வாங்க முயற்சி செய்தனர் .இதனால் 20 லட்சமாக இருந்த அவருடைய விலை 60 லட்சமாக உயர்ந்தது.


Click it and Unblock the Notifications