சென்னை : ஐபிஎல் தொடரில் 17வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட சிஎஸ்கே அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசி 3 ஓவரில் 50 ரன்கள் அடிக்க வேண்டும் என இருந்தது. இதில் தோனி, ஜடேஜா ஜோடி அபாரமாக விளையாடி ராஜஸ்தான் வீரர்களுக்கு மரண பயத்தை காட்டியது.
கடைசியில் சிஎஸ்கே அணி ஒரு பந்தில் 5 ரன்கள் அடிக்க வேண்டும் என இருந்தது. ஆனால் தோனியால் சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் போட்டி குறித்து கருத்து தெரிவித்த தோனி, நாங்கள் ஆட்டத்தில் நடு ஓவர்களில் சரியாக விளையாடவில்லை. பவுண்டரி அடிக்க முடியவில்லை என்றாலும் ரன்களை ஓடியாவது எடுத்திருக்க வேண்டும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக கூட ஆடுகளம் அவ்வளவாக செயல்படவில்லை. ஆனால் அனுபவ மிக்க ஸ்பின்னர்கள் ராஜஸ்தான் அணியில் இருந்ததால் எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்கள்.
இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு கடினமாக இல்லை. பேட்ஸ்மேன்கள் பொறுப்பு எடுத்துக் கொண்டு இன்னும் தங்களுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும். கடைசி பேட்டிங் ஜோடியாக இருந்தும் ராஜஸ்தான் இலக்கு அருகே வரை வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்று குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்கும் போது ரன் ரேட் பாதிக்காது.
இது ஐபிஎல் தொடரின் இறுதியில் கை கொடுக்கும். எதிரணி உங்களுக்கு எப்படி பில்டிங் நிற்க வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். பந்துவீச்சாளர் என்ன செய்கிறார் என்று பாருங்கள். நீங்கள் பேட்டிங் செய்யும்போது பவுலர்கள் தவறு செய்யும் வரை காத்திருக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் சரியான முறையில் செயல்பட்டால் அது அவர்களுடைய அதிர்ஷ்டம்.

ஆனால் நான் எப்போதும் பந்துவீச்சாளர்கள் தவறு செய்யும் வரை காத்திருப்பேன்.இது எனக்கு நல்ல பலனை கொடுத்து இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் நமது பலத்தை அறிந்து கொண்டு விளையாட வேண்டும். என்னுடைய பலம் பந்தை பவுலர்களுக்கு நேராக சிக்ஸ் அடிப்பது. இன்றைய போட்டியில் நிறைய பனிப்பொழிவு இருந்தது.
பவுண்டரி லைனுக்கு பந்துகள் செல்லும் போதெல்லாம் அது ஈரமாகி விடுகிறது. இது பேட்ஸ்மேனுக்கு தான் சாதகமான விஷயமாக இருக்கும். பந்துவீச்சாளர்களை பொருத்தவரை நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு போட்டி களம் இறங்குவதற்கு முன்பு வரை சிஎஸ்கே வின் கேப்டனாக 200 போட்டி என்று எனக்கு தெரியாது. இது போன்ற மைல்கல்லுக்காக நான் விளையாடவில்லை. எனக்கு வேண்டியது எல்லாம் நாம் எவ்வாறு களத்தில் செயல்படுகிறோம் மற்றும் முடிவு என்ன என்பதுதான் என்று தோனி கூறினார்.