IPL 2025: காவ்யா மாறன் ஹேப்பி.. அணிக்கு திரும்பிய முக்கிய ஆல் ரவுண்டர்.. பிசிசிஐ அனுமதி அளித்தது
ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி பங்கேற்பதற்கு பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமி உடற்தகுதி சான்று அளித்துள்ளது. இதை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உற்சாகமடைந்துள்ளது. அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
2024 ஐபிஎல் தொடரில் நிதிஷ் குமார் ரெட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்து சிறப்பாக ஆடி இருந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார் நிதிஷ் குமார் ரெட்டி.

அதன் பின் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்த நிதிஷ் குமார் காயத்தில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் இருந்தார். இந்த நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா, இல்லையா? என்ற சந்தேகம் இருந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை 2025 ஐபிஎல் ஏலத்தில் விடுவிக்காமல் அணியில் தக்க வைத்திருந்தது. அவர் மிகவும் முக்கியமான வீரர் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நினைத்தது. இதற்கிடையே தான் அவர் காயத்தில் சிக்கியிருந்தார். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி அளித்துள்ளது.
இதை அடுத்து சன்ரைசர்ஸ் அணி வட்டாரம் மகிழ்ச்சியில் உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் நிதிஷ் குமார் ரெட்டி 303 ரன்கள் குவித்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி 33.6 ஆகவும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 142.92 ஆகவும் இருந்தது.
நிதிஷ் குமார் ரெட்டி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராகவும் இருக்கிறார். கடந்த ஆண்டு 7 இன்னிங்ஸ்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் அதிக ஓவர்கள் வீசுவார் என எதிர்பார்க்கலாம்.
2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மோத உள்ளது. இந்தப் போட்டி மார்ச் 23 அன்று நடைபெற உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த முறையும் அதே போல சிறப்பாக ஆடுமா? என பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications