அடடே..!! தோல்விக்கு சூப்பர் காரணம் சொன்ன சஞ்சு சாம்சன்.. மீண்டு வருவோம் என நம்பிக்கை.. ஐபிஎல் டமாஷ்
கொல்கத்தா: ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் முதல் குவாலிபையரில் தோற்றது ஏன் என்பது குறித்து சஞ்சு சாம்சன் ஒரு சூப்பர் காரணத்தை கண்டுபிடித்துள்ளார்.
பொதுவாக அணி தோல்வியை தழுவும் போது வீரர்கள் தங்கள் அணி செய்த தவறையும், எங்கு கோட்டை விட்டோம் என்று கூறுவார்கள்.
சிலர் டாஸ் உண்மையில் சிக்கலை தந்து இருந்தால், டாசால் தோற்றோம் என்று சொல்வார்கள். ஆனால் சஞ்சு சாம்சன், வித்தியாசமாக கூவியுள்ளார்.

காரணம் என்ன?
எங்கள் அணியின் ஸ்கோர் எனக்கு திருப்தியாக இருந்தது. ஆடுகளம் கொஞ்சம் வித்தியாசமாக செயல்பட்டது. முதலில் பந்து ஸ்விங் ஆனது. பந்துவீச்சாளர்களுக்கு கை கொடுத்தது. பந்தின் பவுன்சையும் கணிக்க முடியவில்லை. ஆனால் நான் ரன் அடித்தது அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். இது போன்ற சூழலில் நாங்கள் இவ்வளவு ரன்கள் அடித்ததே பெருமை.

அதிர்ஷ்டம் இல்லை
ஆனால், ஆடுகளம் 2வது இன்னிங்சின் போது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக செயல்பட்டது. இது போன்ற ஆட்டத்தில் டாஸ் மிகவும் முக்கியம். இந்த ஆட்டத்தில் அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம். அதிர்ஷ்டம் இந்த ஆட்டத்தில் பெரும் பங்கு வகித்தது. அடுத்த ஆட்டத்தில் மீண்டு வருவோம் என நம்புகிறேன். ( ராஜஸ்தான் அணிக்கு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் குவாலிபையர் 2 போட்டியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்)

பாண்டியா பஞ்ச்
இதனிடையே வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, கடினமான சூழலை கடந்து வந்துள்ளேன். எனது மனைவி, சகோதரர் ஆகியோர் என் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். எங்கள் அணியில் உள்ள 23 வீரர்களையும் நினைத்து பெருமைப்படுகிறேன். நம்மை சுற்றி நல்ல மனிதர்கள் இருந்தால், நல்ல விஷயம் நமக்கு நிச்சயம் நடக்கும். நாங்கள் கிரிக்கெட்டை மிகவும் மதிக்கின்றோம்.

பாராட்டு
ரஷித் கான் சிறப்பாக செயல்பட்டார். டேவிட் மில்லரை நினைத்து பெருமைப்படுகிறேன். என்னை அணி எந்த இடத்தில் பேட்டிங் செய்ய சொல்கிறதோ, அந்த இடத்தில் பேட் செய்வேன். மும்பைக்கு எதிராக சொதப்பினோம். ஆனால் இம்முறை தோற்றாலும் களத்தில் கடைசி வரை நிற்க வேண்டும் என்று எண்ணினேன். 4 முறை ஐபிஎல் பைனலில் விளையாடி இருக்கிறேன். சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறேன். அந்த உணர்வு குறித்து சக வீரர்களிடம் கூறி இருக்கிறேன்.


Click it and Unblock the Notifications