“எங்களுக்கு அவர் மட்டும் போதும்”.. டெல்லி அணிக்குள் நடந்த பிரச்சினை.. கழட்டிவிடப்பட்ட சீனியர் வீரர்கள்
சென்னை: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சீனியர் வீரர் ஒருவர் கழட்டிவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மெகா ஏலத்தின் போதும் பெரும் வாரியான வீரர்கள் வேறு அணிகளுக்கு செல்வார்கள்.
அந்தவகையில் இந்தாண்டு அதிகபட்சமாக 4 வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்தாண்டு கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படவிருப்பதால் முக்கிய வீரர்களை கைவிட வேண்டிய கட்டாயத்தில் அணிகள் உள்ளன.

சிஎஸ்கே அறிவிப்பு
அந்தவகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனியை முதன்மை தேர்வாக தக்கவைக்க இருப்பதாக அறிவித்துவிட்டது. அவருக்கு அடுத்தபடியாக ருதுராஜ் கெயிக்வாட், ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. மற்ற அணிகள் அனைத்து சீனியர் வீரர்களை தங்களுடனே வைத்துக்கொள்ளும் முடிவில் உள்ளன.

டெல்லி அணியின் முடிவு
இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டும் முக்கிய வீரரை கழட்டிவிட முடிவெடுத்துள்ளது. அரையிறுதிக்கு கூட செல்லாமல் தவித்து வந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றவர் ஸ்ரேயாஸ் ஐயர். அவரின் கேப்டன்சியில் டெல்லி அணி புத்துணர்ச்சி பெற்றது. காயம் காரணமாக அவருக்கு மாற்றாக கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் வந்த பிறகும் பொறுப்பில் நீட்டிக்கப்பட்டார். அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலாவது கேப்டன் பதவியை மீண்டும் தர வேண்டும் என ஸ்ரேயாஸ் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு டெல்லி அணி மறுத்துவிட்டதால் பிரச்சினை ஏற்பட்டு வெளியேறுவதாக தெரிகிறது.

சீனியர் வீரருக்கு ஏமாற்றம்
இதனால் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக முன்னிறுத்தி முதலில் தக்கவைக்க டெல்லி முடிவு செய்துள்ளது. அடுத்தபடியாக இளம் வீரர் பிரித்வி ஷா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோரை தக்கவைக்க முடிவெடுத்துள்ளது. அயல்நாட்டு வீரர்களின் பிரிவில் ஆன்ரிக் நார்ட்ஜேவை டெல்லி அணி தன்னுடன் வைத்துக்கொள்ளவுள்ளது. அணியின் மூத்த வீரரான ஷிகர் தவான் கூட தக்கவைக்கப்படவில்லை.

புது அணிகள் மும்முரம்
சிறப்பான கேப்டன்சியை செய்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரை டெல்லி அணி கழட்டிவிட இருப்பதால் நிச்சயம் அவருக்காக புதிதாக வந்துள்ள 2 அணிகளும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்றார் போல இந்தியாவுக்காக டி20 தொடரிலும் ஸ்ரேயாஸ் வாய்ப்பு பெற்றுவிட்டார். இதனால் அவரின் மதிப்பு மேலும் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications