சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ள போகிறார்கள் என்பது தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
ஒரு சிலர் அணி எட்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு சிலர் அணி ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இரண்டு வீரர்கள் ஆர்டிஎம் கார்டு மூலம் தேர்வு செய்ய பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணி தற்போது முதல் வீரராக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை தான் தக்க வைத்துக் கொள்ளும். தோனி இருக்கும் போது அடுத்த கேப்டன் ருதுராஜ் தான் என அடையாளம் காணப்பட்டு முதல் சீசனில் வெற்றிகரமாகவே செயல்பட்டார்.
இதனால் ருதுராஜ்க்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு முதல் வீரராக தக்கவைக்கப்படுவார். இதேபோன்று இரண்டாவது வீரராக சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா தக்க வைக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது வீரராக சிஎஸ்கே அணியின் சிங்கம் மற்றும் முன்னாள் கேப்டன் தோனி தக்கவைக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
நான்காவது வீரராக சமீர் ரிஸ்வி அல்லது சிவம் துபே தக்கவைக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இருவரும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் என்பதால் இரண்டு பேரில் ஒருவர் சிஎஸ்கே அணிக்கு கண்டிப்பாக செல்வார்கள். ஐந்தாவது வீரராக தீபக் சாஹர் இடம் பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. எனினும் தீபக் சாஹர் முழு உடல் தகுதியில் இல்லை.
கடந்த இரண்டு சீசன்களில் சேர்த்து மொத்தமே 18 போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். இதனால் அவர் கழற்றி விடப்பட்டால் அந்த இடத்தில் துஷார் தேஷ் பாண்டே அல்லது ராஜவதர்த்தன் ஹங்கர்கேகர் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது. வெளிநாட்டு வீரர்களாக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதிஷா பதிராணா சிஎஸ்கேவில் கண்டிப்பாக இடம் உள்ளது.
இது போன்று இரண்டாவது வெளிநாட்டு வீரராக சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் கான்வே இடம்பெற போகிறார். கான்வே தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தை பெறவில்லை என்பதால் அவர் சிஎஸ்கே அணிக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாட கூடும்.