சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் இன்னும் மூன்று மாதத்தில் நடைபெற இருக்கிறது.இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. எந்த வீரர்களை எவ்வளவு ஊதியம் கொடுத்து தக்க வைக்க வேண்டும் என்பது குறித்தும் ஒவ்வொரு அணியும் ஃபார்முலாவை வகுத்து வருகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் எந்த வீரரை முதன்மையான வீரராக தக்க வைக்க வேண்டும். யாருக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும் என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தான் தோனியை இந்திய அணிக்காக விளையாட வீரராக கருதி அவருக்கு நான்கு கோடி ரூபாய் ஊதியத்தை வழங்க சிஎஸ்கே அணி யோசித்து வருகிறது. இதற்காக பிசிசிஐ யின் ஒப்புதலை வாங்க சிஎஸ்கே முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் தோனி தன்னுடைய ஊதியத்தை அதிரடியாக குறைத்துக் கொள்ள இருக்கிறார்.
கடந்த ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் தோனி 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருந்தார். ஜடேஜாவுக்கு அதிக சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தோனி இந்த தியாகத்தை செய்தார். இந்த நிலையில் யாரும் செய்ய முன்வராத செயலை தோனி செய்ய உள்ளார். அதாவது தன்னுடைய ஊதியத்தை 12 கோடியில் இருந்து நான்கு கோடி ரூபாயாக குறைக்க தோனி முன்வந்துள்ளார்.
இதன் மூலம் மற்ற வீரர்களுக்கு ஊதியம் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கடந்த 2022 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் சம்பளம் 6 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், ருதுராஜ் சம்பளம் இரு மடங்குக்கு மேலாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
மெகா ஏலத்தில் முதன்மை வீரராக சிஎஸ்கே அணி ருதுராஜை தக்க வைக்க உள்ளது. இதன்படி ருதுராஜின் சம்பளம் 6 கோடியிலிருந்து 16 கோடி ரூபாயாக உயரப் போகிறது. ஐபிஎல் வரலாற்றில் பெரிய அளவில் இந்திய அணிக்காக விளையாடாத வீரரின் ஊதியம், இவ்வளவு பெரிய அளவில் அதிகரிப்பது இதுதான் முதல் முறை. இதற்கு முழுக்க முழுக்க தோனியின் தியாகமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.