மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான வீரர்களை தக்க வைக்கும் பட்டியல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதற்கு முன்பு பல்வேறு அணிகள் தங்களுக்குள் வீரர்களை டிரேட் செய்து மாற்றி இருக்கிறார்கள். சில அணி வெறும் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு வீரர்களை மற்ற அணிக்கு விற்று இருக்கிறார்கள்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களிடம் இருந்த பணத்தை வைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த நிதிஷ் ராணா வாங்க முயற்சி செய்தது. ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. நிதிஷ் ரானா இடது கை பேட்ஸ்மேனாக விளங்குகிறார்.

நம்பர் மூன்றாவது இடத்தில் விளையாடும் நிதிஷ் ராணா, ரெய்னா போல் அதிரடி காட்டக் கூடியவர். இதனால் நிதிஷ் ராணா அணிக்குள் வந்தால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை மேலும் பலமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் அணி இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது டெல்லி அணியிடம் நிதிஷ் ராணாவை நான்கு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கொடுத்திருக்கிறது.
இதேபோன்று ஷாம் கரனை 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே அணி இடம் இருந்து ராஜஸ்தான் வாங்கியுள்ளது. இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி தங்களிடம் இருந்த அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணிக்கு 30 லட்சம் ரூபாய்க்கு ட்ரேட் செய்திருக்கிறது. இதுபோன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்த டோனாவன் பெரேரியா என்ற வீரரை ஒரு கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கி இருக்கிறது.
கொல்கத்தா அணியில் இருந்த சுழற் பந்துவீச்சாளர் மார்க்கண்டேவை 30 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி டிரேட் செய்திருக்கிறது. இதை எல்லாம் விட பெரிய டிரேடாக இன்று காலை சிஎஸ்கே அணியின் ஜடேஜா, ராஜஸ்தான் அணிக்கு 14 கோடி ரூபாய்க்கு சென்றுள்ளார். அதேசமயம் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை 18 கோடி ரூபாய்க்கு சி எஸ் கே அணி வாங்கியுள்ளது. வரப்போவது மினி ஏலம் என்பதால் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.